Friday, March 6, 2009

சந்தோஷம்

ஒரு பிரமாண்டமான கண்ணாடி பங்களா. அந்த பங்களாவின் சாலை ஓரமாகத் துள்ளி விளையாடிக் கொண்டிருந்த நாய்க்குட்டி ஒன்று பங்களாவுக்குள் நுழைந்தது. உள்ளே திரும்பிய பக்கமெல்லாம் தெரிந்த கண்ணாடிகளில் அதன் பிம்பங்கள் தெரிய, அது தன்னைச் சுற்றிலும் நூற்றுக் கணக்கான நாய்கள் மகிழ்ச்சியாக இருப்பதைப் பார்த்து அந்த நாய்க்கும் முன்பை விட பலமடங்கு சந்தோஷம் பெருக்கெடுத்தது.

இந்த நாய்க்குட்டி வந்து போன சிறிது நேரம் கழித்து அந்தக் கண்ணாடி பங்களாவுக்குள் கோபமான உறுமலுடன் வேறு ஒரு தெரு நாய் நுழைந்தது. தன்னைச் சுற்றிலும் நூற்றுக் கணக்கான நாய்கள் கோபத்துடன் முறைப்பதைக் கண்டு எரிச்சலாகி அவற்றின் மீது ஆவேசத்துடன் பாய்ந்தது. கண்ணாடிகள் உடைந்து சிதறி, அந்த நாயின் உடம்பைக் கீறி புண்ணாக்கின.

பொருள்: நம்மைச் சுற்றியுள்ள மனிதர்களின் முகங்கள் அனைத்தும் கண்ணாடி மாதிரி தான். நாம் எந்த ஒருவரையும் சந்தோஷமாக பார்த்தால் நாம் பார்ப்பவரின் முகத்திலும் அதே சந்தோஷம் பிரதிபலிக்கும். அப்படியல்லாமல் ஒரு வேளை கோபமுடன் ஒருவரைப் பார்த்தால் நாம் பார்ப்பவரின் முகமும் நமக்கு கோபமாகவே காட்சியளிக்கிறது. இதனால் அநேக சமயங்களில் நமது கோபத்தின் காரணமாக நம்மையே நாம் அழித்துக் கொள்கிறோம். இதை தொடர்புபடுத்தி முந்தைய "தினம் ஒரு தகவலில்" நாயின் தருக்கம் என்பது பற்றியும் கூறியுள்ளோம்.

நமது சந்தோஷம், அது நமது மன அலைகளில் தான் உருவாகிறது.எனவே நம்மை நாமே எப்பொழுதும் சந்தோஷமாக வைத்துக்கொள்ள பழகுவோம்!

No comments:

Post a Comment