Thursday, May 28, 2009

போரட்டம்

வாழ்க்கையில் நாம் எப்படிச் சோதனைகளை எதிர்கொள்கிறோம் என்பதைப் பொறுத்து அவை தோல்வியாகவோ அல்லது வெற்றியாகவோ அமையலாம். ஆனால் முயற்சி இல்லாமல் வெற்றி வருவதில்லை.

ஒரு உயிரியல் ஆசிரியர் தனது மாணவர்களுக்கு ஒரு கம்பளிப் புழு எப்படி வண்ணத்துப் பூச்சியாக மாறுகிறது என்று சொல்லிக் கொண்டு இருந்தார். அவர் தனது மாணவர்களிடம் ஒரு வண்ணத்துப் பூச்சி கூட்டினைக் காட்டி அடுத்த ஒரு சில மணி நேரங்களில் வண்ணத்துப் பூச்சி தனது கூட்டிலிருந்து போராடி வெளிவரப்போகிறது என்றும் ஆனால் யாரும் அதற்கு உதவக்கூடாது என்றும் கூறிவிட்டு வெளியே சென்று விட்டார்.

மாணவர்களில் ஒருவன் அதன் மேல் இரக்கப்பட்டான். தனது ஆசிரியரின் சொல்லை மீறி, அந்த வண்ணத்துப் பூச்சி தனது கூட்டிலிருந்து வெளிவர உதவுவதற்குத் தீர்மானித்தான். அந்த வண்ணத்துப் பூச்சி போராட தேவையின்றி எளிதாக வெளியே வரும் பொருட்டு அந்தக் கூட்டை உடைத்தான். ஆனால் சிறிது நேரத்திற்கு பிறகு வண்ணத்துப் பூச்சியும் இறந்து விட்டது.

இப்பொழுது அந்த மாணவன் வண்ணத்துப் பூச்சியின் இறப்பிற்கு காரணமாகி விட்டான். கூட்டிலிருந்து வெளிவரப் போராடும் போராட்டம் உண்மையில் அதனுடைய சிறகுகளை வளர்க்கவும், தன்னை பலப்படுத்திக் கொள்ளவும் உதவும் என்பது தான் இயற்கையின் சட்டம். மாணவன் அந்த வண்ணத்துப் பூச்சியயை போராட்டத்தில் இருந்து காப்பாற்றி விட்டதால், அது இறந்து விட்டது. இதே கொள்கையை நமது வாழ்விற்கும் பயன்படுத்துங்கள். போராட்டங்கள் இல்லாமல் வாழ்வில் எதுவுமே பயன்தராது.

Tuesday, May 26, 2009

கடின உழைப்பு

கடின உழைப்பு என்பது ஒரு நல்ல தொடக்கமும், முடிவுமாகும். கடினமாக ஒருவர் உழைத்தால், அவர் மகிழ்ச்சியாக இருப்பார்; அவ்வாறு அவர் மகிழ்ச்சியாக இருந்தால், அவர் கடினமாக உழைப்பார். சிறந்த கருத்துகளை நாம் செயல்படுத்தாதவரை அவற்றால் பலனில்லை. மனவலிமையும் கடின உழைப்பும் இல்லையென்றால் எப்பேற்பட்ட திறமையும் வீணாகிவிடும்.


உழைப்பின் உதாரணங்கள்:

  • ஒரு வாத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அது நீரின் அடியில் ஓயாது காலால் உதைத்துக் கொண்டே இருக்கும். ஆனால் நீரின் மேல் அமைதியாகவும், சீராகவும் காணப்படும்.
  • ஒரு பறவையைய் எடுத்துக் கொள்ளுங்கள். இயற்கை பறவைகளுக்கு உணவைத் தருகிறதே தவிர அவற்றை அதன் கூடுகளுக்கு கொண்டு செல்வதில்லை. பறவை காலை முதல் மாலை வரை அலைந்தே அதன் இரையைத் தேடுகிறது.
  • மில்ட்டன் தனது ‘பாரடைஸ் லாஸ்ட்’ என்ற காவியத்தை எழுதுவதற்காக தினந்தோறும் அதிகாலை நான்கு மணிக்கே எழுந்து விடுவாராம்.
  • 'வெப்ஸ்டர்ஸ் அகராதியைய்’ தொகுப்பதற்காக நோவா வெப்ஸ்டர் 36 ஆண்டுகள் கடினமாக உழைத்தாராம்.
  • ஒரு வயலின் வித்துவான் தனது கச்சேரியை முடித்தவுடன், யாரோ ஒருவர் மேடையருகில் வந்து “உயிரைக் கொடுத்தாவது உங்களைப் போல வாசிக்கும் திறமையைப் பெற வேண்டும்” என்று சொன்னாராம். “நானும் அதைத்தான் செய்தேன்” என்று வித்வான் பதிலளித்தாராம்.

கடுமையான உழைப்பினால் விளைவதே மன எழுச்சி என்பதை உண‌ர்ந்திடுவோம்!

எதை நீ அதிகமாக விரும்புகிறாய்?

ஓர் இளைஞன் சாக்ரடீஸிடம் வந்து வெற்றிக்கான இரகசியத்தைப் பற்றிக் கேட்டான். அதற்கு சாக்ரடீஸ் மறுநாள் காலை ஆற்றங்கரைக்கு வருமாறு கேட்டுக் கொண்டார். மறுநாள் காலை ஆற்றங்கரையில் இருவரும் சந்தித்துக் கொண்டனர். சாக்ரடீஸ் அந்த இளைஞனை ஆற்றை நோக்கி உள்ளே வரும்படி கேட்டுக் கொண்டார். கழுத்தளவு நீர் வரை உள்ளே வந்தவுடன் அந்த இளைஞனை நீரினுள் வைத்து அமுக்கினார். அவன் வெளியே வர முயற்சி செய்தான். ஆனாலும் அவனை அப்படியே அமுக்கியவாறு அவனது முகம் நீல நிறமாக மாறும் வரை வைத்திருந்தார். சற்றுப் பொறுத்து அவனது தலையை நீரினுள்ளிருந்து வெளியே இழுத்தவுடன் அந்த இளைஞன் செய்த முதல் வேலையே தன்னால் இயன்ற அளவு காற்றை மீண்டும் மீண்டும் உள்ளிழுத்தான். சாக்ரடீஸ் அவனிடம் “நீ நீருக்குள் இருந்த போது நீ எதை அதிகம் விரும்பினாய்?” என்று கேட்டார். அந்த இளைஞன் “காற்று” என்று பதிலளித்தான்.


சாக்ரடீஸ், “வெற்றியின் இரகசியமே அது தான் .நீ எவ்வளவு அதிகமாக காற்றை விரும்பினாயோ அது போன்றே வெற்றியையும் விரும்பினால் உனக்கு அது கிட்டும்” என்று சொன்னார். இதைத் தவிர வேறு எந்த ரகசியமும் இல்லை.

“ஒரு சுட்டெரிக்கும் ஆசையே சாதனைகளின் தொடக்கமாகும். ஒரு சிறிய தீயால் எப்படி அதிக வெப்பத்தை தர முடியாதோ, அது போல ஒரு பலவீனமான ஆசையால் மிகப்பெரிய வெற்றியை உருவாக்க முடியாது”.

Monday, May 25, 2009

முயலாமை மே 21, வியாழன் 2009

நாமெல்லோரும் ஆமை மற்றும் முயல் கதையை நன்கு அறிவோம். முயல் தனது வேகத்தைப் பற்றி தற்பெருமை அடித்துக் கொண்டது. அது ஆமையை போட்டிக்கு அழைத்தது. ஆமையும் அந்த சவாலை ஏற்றுக் கொண்டது. ஆமை ஒரே சீராக போய்க் கொண்டிருந்தது. முயலோ வேக வேகமாக ஓடி ஆமையைத் தனக்குப் பின்னால் வெகுதூரம் விட்டு முன்னேறியது. அது, தான் போட்டியை நிச்சயமாக வென்று விடுவோம் என்ற தன்னம்பிக்கையில் ஒரு சிறுதூக்கம் போடலாம் என்று முடிவெடுத்தது. அது கண்விழித்துப் பார்த்தபோது, போட்டி ஞபாகத்திற்கு வரவே உடனே ஓடத்துவங்கியது. ஆமை ஏற்கனவே இறுதிக் கோட்டை அடைந்து வெற்றி பெற்று விட்டதைத்தான் பார்க்க முடிந்தது. சீரான தொடர்ச்சியான முயற்சிக்கு கட்டுப்பாடு தேவை. சீரற்ற குறிக்கோளற்ற முயற்சியை விட இது முக்கியமானதாகும்.
நகைச்சுவையால் மக்களின் மனங்களில் சிறந்த கருத்துக்களை விதைத்து, சிரிப்பு என்னும் பயிரை வளர்த்தவர் கலைவாணர் என்ற சிறப்பு பட்டத்தை பெற்ற திரு. என். எஸ். கிருஷ்ணன் அவர்கள். கிருஷ்ணன் அவர்கள் இந்த முயல் ஆமையை இவ்வாறு பள்ளி மாணவர்களுக்கு கூறுகிறார். முயல் ஆமையில் எது ஜெயித்தது என்று பள்ளி மாணவர்களிடம் கேட்டார். ‘ஆமை ஜெயித்தது, முயல் தோற்றது’ என்றனர் மாணவர்கள். கலைவாணர் பதில், அதை அப்படிச் சொல்லக்கூடாது. முயல் ஆமையால் தோற்றது(முயல் + ஆமையால் தோற்றது. முயல் + ஆமை = முயலாமை). முயலாமை என்பது முயற்சி செய்யாமை. முயற்சி இல்லாதவர்கள் வலிமையுடையர்களாக இருந்தாலும் தோற்றுத்தான் போவார்கள்.
கட்டுப்பாட்டுடன் ஒன்றை செய்வதும், தவறு நடந்த பிறகு வருந்துவதும் மிகவும் வேதனை தருபவை. பலருக்கு இவ்விரண்டில் ஏதாவது ஒன்றைத் தேர்ந்தெடுக்க வாய்ப்பு இருக்கிறது. இதில் எது அதிகம் வேதனை தருவது என்று நீங்கள் ஊகித்துக் கொள்ளுங்கள்.

கட்டுப்பாடு ‍ பழக்கத்திற்கு கஷ்டமாகினும் வாழ்க்கைக்கு முறையான வெற்றி தரும் சக்தியாகும்.

Wednesday, May 20, 2009

ஆசையின் அழிவு மே 19, செவ்வாய் 2009

இந்த உலகில் பிறந்த உயிரினங்களில் சிறு பூச்சி முதல் மனிதன் வரை ஆசைக்கு அடிபணியாத உயிரினங்களே இல்லை என கூறலாம். அவ்வாறு ஆசைக்கு அடிப்பட்ட நாம் ஏதாவது ஒரு வகையில் நமது வாழ்க்கையை தொலைக்கிறோம். இதில் விலங்கினங்கள் ஏதாவதொரு (தனது) புலன்களின் ஆசையினால் மட்டுமே தனது வாழ்க்கையை முடித்துக் கொள்கின்றன. ஆனால் ஆறறிவு படைத்த மனிதன் ஐம்புலன்களாலும் வாழ்க்கையை தொலைக்கின்றான்.
உதாரணமாக, மீன் எதனால் அழிகிறது? தூண்டில் புழுவுக்கு ஆசைப்பட்டு வாயை திறந்து புழுவைச் சாப்பிடுகிறது. மரணம் மீனைச் சாப்பிடுகிறது.

வண்டு எதனால் அழிகிறது? நாசியன் நறுமணத்தால் பூவில் மயங்கிக்கிடக்கிறது. பூவோ கருவுற்று, காயாகும் நோக்கில் இதழ்கழை மூடி விடுகிறது. மூங்கிலைத் துளைக்கும் வலிய வண்டு, நாசியின் நறுமணச் சுவையில் மயங்கி மெல்லிய பூவைக் கூடத் துளைக்க முடியாமல் உள்ளேயே கிடந்து சாகிறது.
அசுணமா என்றொரு பறவை. நல்ல இசை என்றால் அதற்கு நாட்டம். வேடுவர்கள் புல்லாங்குழல் எடுத்து வாசிக்கும் போது, இசைக்கு மயங்கி அவர்கள் தலைக்கு மீது வட்டம் இடும். வேடுவர்கள் உடனே கீழே நெருப்பை மூட்டி, பறை என்ற தோல் கருவியை எடுத்து தாருமாறாகத் தட்டியவுடன் நெருப்பில் விழுந்து வேடுவர்க்கு உணவாகி விடுகிறது. காது அதன் அழிவிற்கு காரணம்.
விட்டில் பூச்சி ஏன் அழிகிறது? கண் தான் காரணம். நெருப்பை பார்த்ததும் அதன் அருகில் சென்று நெருப்பிலேயே விழுந்து இறந்து விடுகிறது. கண்ணால் அழிகிறது விட்டில் பூச்சி.

யானைக்கு அழிவு எதனாலே? யானையைய் பிடிப்பவர்கள் காட்டிலே பழக்கிய பெண் யானையை தொலைவில் நிறுத்துவார்கள். அதன் அருகில் பள்ளம் வெட்டி இலை தழைகளைப் போட்டு இலேசாக மூடி வைப்பார்கள். காட்டில் அலையும் ஆண் யானை, மெய் இன்பம் என்ற உடல் சுகம் கருதி பெண் யானையை நோக்கி வரும். வழியில் பள்ளத்தில் விழுந்து மனிதர்களிடம் மாட்டிக் கொள்ளும். பிறகு தன் வாழ்நாள் முழுவதும் மரம் இழுத்து மனிதன் இடும் பணிகளைச் செய்து துன்பம் அடையும். மெய் என்ற சரீர ஆசையே யானையின் அழிவுக்கு காரணம்.
கண்ணாலே விட்டிலும், காதாலே அசுணமா பறவையும், நாசியால் வண்டும், வாயால் மீனும், மெய்யாலே யானையும் அழிகிறது. ஆனால் மனிதனோ இந்த ஒவ்வொரு புலன்களாலும் அழிவைத் தேடுகிறான். இப்படி ஐம்புலன்களாலும் அழிவைத் தேடுவதற்கு மூலக்காரணம் ஆசை என்னும் மனதை அடக்காமையே. ஆசை இல்லாமல் இருக்கவே முடியாது. ஆனால் ஆசைக்குள் நாம் முழுமையாக சிக்கிக் கொண்டால் நம்மை யாராலும் காப்பாற்ற முடியாது. ஆசையைய் பற்றிய ஆசையைய் துறந்தோர் கூறும் அறிவுரைகள்:
புத்தர்… ஆசையே துன்பத்திற்கு காரணம்.
இராமகிருஷ்ணர்…நமக்குள் ஆசை இருக்கலாம். நாம் ஆசைக்குள் சிக்கிவிடக்கூடாது. ‘படகு தண்ணீருக்குள் இருந்தால் ஆபத்து இல்லை. படகுக்குள் தண்ணீர் புகுந்து விட்டால் ஆபத்து தவிர வேறு எதுவும் இல்லை.
ஆசையின் கொடுமை, அதை அடையும் வரை ஆர்வம் இருக்கும். அடைந்ததும் நிறைவு வராது.

ஆத‌லால் அள‌வான‌ ஆசைக‌ளோடு வாழ்ந்து சுக‌ம் பெருவோம்.

ஆன்மா மே 18, திங்கள் 2009

திருமூலர் தனது திருமந்திரத்தில் மனித உடலிலும், உடலுக்கு அப்பாலும் உள்ளது ஆன்மா ஒன்றே என்று கூறுகிறார். இதனை “கூடு விட்டுக் கூடு பாயக் கூடியது” என்றும் கூறுகிறார். அதாவது, ஒரு பிறவியில் நற்பெயர் எடுத்தவன் தனது உடலால் மட்டுமே இறக்கிறான். ஆனால் அவனது ஆன்மாவானது மற்றொருவரின் உடலில் ஏறி இந்த உலகிற்கு நல்லவற்றை செய்து கொண்டே தான் இருக்கிறது.

பாலை’ வைத்து ஆன்மாவை இவ்வாறு விளக்குகிறார் சொல்வேந்தர் சுகிசிவம் அவர்கள். பாலுக்குள் நெய் மறைந்திருக்கிறது. ஆனால் அது நம் கண்ணுக்குத் தெரிவதில்லை. பாலை நாம் எதுவும் செய்யாமல் அப்படியே வைத்து விட்டால் அது மறுநாளே கெட்டுப் போய்விடும். சரி, இந்தப் பாலை அப்படியே வைக்காமல் அதைக் காய்ச்சி உறை ஊற்றி வைத்துவிட்டால் மறுநாள் அது கெட்டுப் போகாமல் தயிராக வாழ்ந்து கொண்டிருக்கும்.தயிரைக் கடைந்து மோரும் வெண்ணையுமாக பிரித்துவிட்டால், அதே பால் அடுத்த நாளும் உருவகங்கள் மாறி வாழ்ந்து கொண்டிருப்பதாகிறது. வெண்ணெய் ஒரு வாரம் வரை கெடாது. அதன பின்பு கெட்டுப் போய் விடும். அந்த அழிவிலிருந்து அதைப் பாதுகாக்க வேண்டுமானால் அதை நெய்யாக்கிவிட வேண்டும். நெய்யின் சிறப்பியல்பு என்னவென்றால் ‘உலகம் அழியும் வரை’ அதுவும் அழியாது.
ஒரே நாளில் கெட்டுப் போகக் கூடியதான பாலுக்குள்ளேதான் யுக முடிவு வரை கெடாமலிருப்பதான நெய் இருக்கிறது. அதை அப்படியே விட்டுவிட்டால் பாலோடு சேர்ந்து அதுவும் கெட்டுப் போகிறது. ஆனால், அதை தனித்துப் பிரிந்துவிட்டால் நிரந்தரத்தன்மையைப் பெற்று விடுகிறது.
இவ்வாறு, அழியக் கூடியதான தேகத்துக்குள் அழியாததாகிய ஆன்மா இருக்கிறது. அந்த ஆன்மாவே ‘தான்’ என்று அதனை உணர்ந்து, தேகத்தோடு சம்பந்தப்படுத்தாமல் எவன் வாழ்கிறானோ, அவன் அழிவிலிருந்து அழிவற்றதுக்குப் போய் விட்டான் என்று பொருள். மற்றவர்களெல்லாம் தேகத்தையே தாங்கள் என்று கருதிக் கொண்டிருப்பதால் தேகம் அழியும் போது தாங்களும் அழிவதாக உணருகிறார்கள். ஆனால், ஆன்மாவை உணர்ந்தவர்களே தனக்கு மரணமே இல்லை என்பதைத் தெரிந்து கொள்கிறார்கள்.

ஆன்மாவை தங்களது எழுத்துக்களின் மூலம் இன்றும் மக்களின் மனதில் உலாவ விட்டு சென்றுள்ள மாமேதைகளில் சிலர்:• ‘அச்சத்தை வேட்கைதனை அழித்துவிட்டால்’ அப்போது சாவுமங்கே அழிந்து போகும் என்று கூறிய பாட்டுக்கொரு பாரதி .• ‘நேருவா மறைந்தார், இல்லை. நேர்மைக்குச் சாவே இல்லை’.‘ரோஜா மலரே ஏன் மலர்ந்தாய் எங்கள் ராஜா இல்லை மார்பினில் சூட’.‘சாவே உனக்கு ஒரு நாள் சாவு வந்து சேராத’ என்று நேருவின் இறங்கல்பாவில் கண்ணதாசன் பாடிய பாடல் வரிகள் நேருவின் நேர்மையை இன்றும் பறைசாற்றுகின்றன.• ‘போற்றுவார் போற்றட்டும் புழுதி வாரித் துற்றுவார் துற்றட்டும் தொடர்ந்து செல்வேன். ஏற்றதொரு கருத்தை எனதுள்ளம் என்றால் எடுத்துரைப்பேன் எவர்வரினும் நில்லேன்; அஞ்சேன்’ என்று நெஞ்சு நிமிர்த்திச் சொல்கின்ற துணிவு கவிஞர் கண்ணதாசனுக்கு மட்டுமே இருந்தது.• இந்த ஆன்மா வீரத்தை இறுதியாக ஒரு பாடலில் தெரிவிக்கிறார்.
“நான் நிரந்தரமானவான் அழிவதில்லைஎந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை”.

Tuesday, May 19, 2009

ஆசையின் அழிவு

இந்த உலகில் பிறந்த உயிரினங்களில் சிறு பூச்சி முதல் மனிதன் வரை ஆசைக்கு அடிபணியாத உயிரினங்களே இல்லை என கூறலாம். அவ்வாறு ஆசைக்கு அடிப்பட்ட நாம் ஏதாவது ஒரு வகையில் நமது வாழ்க்கையை தொலைக்கிறோம். இதில் விலங்கினங்கள் ஏதாவதொரு (தனது) புலன்களின் ஆசையினால் மட்டுமே தனது வாழ்க்கையை முடித்துக் கொள்கின்றன. ஆனால் ஆறறிவு படைத்த மனிதன் ஐம்புலன்களாலும் வாழ்க்கையை தொலைக்கின்றான்.

உதாரணமாக, மீன் எதனால் அழிகிறது? தூண்டில் புழுவுக்கு ஆசைப்பட்டு வாயை திறந்து புழுவைச் சாப்பிடுகிறது. மரணம் மீனைச் சாப்பிடுகிறது.
வண்டு எதனால் அழிகிறது? நாசியன் நறுமணத்தால் பூவில் மயங்கிக்கிடக்கிறது. பூவோ கருவுற்று, காயாகும் நோக்கில் இதழ்கழை மூடி விடுகிறது. மூங்கிலைத் துளைக்கும் வலிய வண்டு, நாசியின் நறுமணச் சுவையில் மயங்கி மெல்லிய பூவைக் கூடத் துளைக்க முடியாமல் உள்ளேயே கிடந்து சாகிறது.

அசுணமா என்றொரு பறவை. நல்ல இசை என்றால் அதற்கு நாட்டம். வேடுவர்கள் புல்லாங்குழல் எடுத்து வாசிக்கும் போது, இசைக்கு மயங்கி அவர்கள் தலைக்கு மீது வட்டம் இடும். வேடுவர்கள் உடனே கீழே நெருப்பை மூட்டி, பறை என்ற தோல் கருவியை எடுத்து தாருமாறாகத் தட்டியவுடன் நெருப்பில் விழுந்து வேடுவர்க்கு உணவாகி விடுகிறது. காது அதன் அழிவிற்கு காரணம்.

விட்டில் பூச்சி ஏன் அழிகிறது? கண் தான் காரணம். நெருப்பை பார்த்ததும் அதன் அருகில் சென்று நெருப்பிலேயே விழுந்து இறந்து விடுகிறது. கண்ணால் அழிகிறது விட்டில் பூச்சி.
யானைக்கு அழிவு எதனாலே? யானையைய் பிடிப்பவர்கள் காட்டிலே பழக்கிய பெண் யானையை தொலைவில் நிறுத்துவார்கள். அதன் அருகில் பள்ளம் வெட்டி இலை தழைகளைப் போட்டு இலேசாக மூடி வைப்பார்கள். காட்டில் அலையும் ஆண் யானை, மெய் இன்பம் என்ற உடல் சுகம் கருதி பெண் யானையை நோக்கி வரும். வழியில் பள்ளத்தில் விழுந்து மனிதர்களிடம் மாட்டிக் கொள்ளும். பிறகு தன் வாழ்நாள் முழுவதும் மரம் இழுத்து மனிதன் இடும் பணிகளைச் செய்து துன்பம் அடையும். மெய் என்ற சரீர ஆசையே யானையின் அழிவுக்கு காரணம்.

கண்ணாலே விட்டிலும், காதாலே அசுணமா பறவையும், நாசியால் வண்டும், வாயால் மீனும், மெய்யாலே யானையும் அழிகிறது. ஆனால் மனிதனோ இந்த ஒவ்வொரு புலன்களாலும் அழிவைத் தேடுகிறான். இப்படி ஐம்புலன்களாலும் அழிவைத் தேடுவதற்கு மூலக்காரணம் ஆசை என்னும் மனதை அடக்காமையே. ஆசை இல்லாமல் இருக்கவே முடியாது. ஆனால் ஆசைக்குள் நாம் முழுமையாக சிக்கிக் கொண்டால் நம்மை யாராலும் காப்பாற்ற முடியாது.

ஆசையைய் பற்றிய ஆசையைய் துறந்தோர் கூறும் அறிவுரைகள்:
  • புத்தர்… ஆசையே துன்பத்திற்கு காரணம்.
  • இராமகிருஷ்ணர்…நமக்குள் ஆசை இருக்கலாம். நாம் ஆசைக்குள் சிக்கிவிடக்கூடாது. ‘படகு தண்ணீருக்குள் இருந்தால் ஆபத்து இல்லை. படகுக்குள் தண்ணீர் புகுந்து விட்டால் ஆபத்து தவிர வேறு எதுவும் இல்லை.
  • ஆசையின் கொடுமை, அதை அடையும் வரை ஆர்வம் இருக்கும். அடைந்ததும் நிறைவு வராது.

ஆத‌லால் அள‌வான‌ ஆசைக‌ளோடு வாழ்ந்து சுக‌ம் பெருவோம்.

Friday, May 15, 2009

பிறரைப் பற்றி எண்ணுதல் மே 15, வெள்ளி 2009

ஒரு நாள் பத்து வயது மதிக்கத்தக்க சிறுவன் ஒருவன் ஐஸ் கிரீம் கடைக்குச் சென்றான். ஒரு இருக்கையில் உட்கார்ந்தான். ‘ஐஸ் கிரீம் கோன் எவ்வளவு?’ என்று கடையில் உள்ள பணிப்பெண்ணிடம் கேட்டான். அவள் பத்து ருபாய் என்றாள். தன் கையில் இருந்த சில்லரைக்காசுகளை எண்ணத் தொடங்கினான். பிறகு அவன் ‘ஒரு சிறிய அளவு ஐஸ் கிரீம் எவ்வளவு?’ என்று கேட்டான். அவள் பொறுமையிழந்து “எட்டு ரூபாய்” என்று பதிலளித்தாள். அந்தச் சிறுவன் ‘எனக்கு ஒரு சிறிய ஐஸ் கிரீம் கப் வேண்டும்’ என்றான். அவனுக்கு ஐஸ் கிரீம் கிடைத்தது, தொகைக்கான சீட்டும் கிடைத்தது. பிறகு, பணம் கொடுத்துவிட்டு வெளியேறினான்.

அந்த வெற்றுத்தட்டை எடுக்க வந்த பணிப்பெண், மனமுருகிப் போனாள். அந்தத் தட்டுக்கு அடியில் ஒரு ரூபாய் நாணயம் அந்தப் பெண்ணின் சேவைக்காக வைக்கப்பட்டிருந்தது. அந்த சிறுவன் ஐஸ் கிரீமை வாங்குவதற்கு முன்னால் அந்தப் பெண்ணின் சேவைக்கு ஊதியம் கொடுக்க வேண்டும் என்று எண்ணி இருந்திருக்கிறான். அவன் தனது உணர்வையும், அக்கறையையும் காட்டி விட்டான். தான் தன்னைப் பற்றி எண்ணுவதற்கு முன்னால் ‘பிறரைப் பற்றி’ எண்ணியிருந்திருக்கிறான்.

நாம் எல்லோரும் அந்தச் சிறுவனைப் போல் எண்ணினால், நாம் வாழ்வதற்குரிய மகத்தான இடத்தைப் பெறுவோம். அக்கறையையும், பண்பட்ட தன்மையையும் காட்டுங்கள். பிறரைப் பற்றி எண்ணுதல் என்பது ஒரு அக்கறையான மனப்பாங்கைக் காட்டும்.

Wednesday, May 13, 2009

மனதை ஆய்வு செய்தல்

மனதை பற்றி ஆய்வு செய்ய அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள ஏசலன் என்ற நிறுவனம் முடிவு செய்தது. அதன்படி வன்முறையைய் மிகவும் விரும்பும் மனம் கொண்டவரின் கண்களை கட்டி விட்டு, எதிரில் தலையணையைய் வைத்து இதை எதிரி என்று நினைத்து குத்தச் செய்தது. முதலில் குத்த நினைத்த மனிதர் பிறகு சற்று யோசித்து சிரித்தார்… தலையணையைய் எப்படி குத்துவது? என்று. இந்த தலையணைக்கும், ரத்தத்தில் உருவான மனிதனுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை என்று கூறியவுடன் அந்த மனிதன் தலையணையைத் தாக்க முற்பட்டான். அதைக் கண்டு அவரைச் சுற்றி நிற்பவர்களே ஆச்சிரியப்படும் வண்ணம் அவன் அடிக்கும் வேகம், அடிக்கும் விதம், தலையணையைக் கிழித்தல் போன்ற செயல்கள் வியப்பை உண்டு பண்ணின. பரிசோதனையின் பின் அவ்வாறு அடித்தவரின் மனம் மிக இலேசாகிவிடுவதை உணர்ந்தார்கள். அவர்களது மனம் இதற்கு முன் இவ்வளவு இலேசாக ஒரு போதும் இருந்ததில்லை.

வன்முறை தோன்றும் போது அதை யாரை நோக்கியாவது வெளிவிடச் செய்யலாம். அப்போது அது முழுதும் தீர்ந்துபோகும். உதாரணமாக, வன்முறையைய் காற்றிடம் காற்றலாம். ஏனெனில் அது எதிர்க்காது. அதுவே மனிதரை நோக்கி வெளிபடுத்தினால் பதிலடி பெற நேரிடும். என்னால் குத்தப்படுபவனே என்னை நோக்கி குத்துவான். அவன் இன்றோ, நாளையோ அல்லது எதிர்காலத்திலோ தாக்கலாம். அவன் காத்திருக்கலாம். கண்டிப்பாக என்றாவது ஒரு நாள் கண்டிப்பாக திருப்பித்தாக்கலாம்.ஒருவரை அடிக்கும் போது, பின்னால் அதற்காக வருத்துதல் மட்டுமின்று இன்னொரு தாக்குதலுக்கு பதிலடி தரவும் தயாராகிறோம். இவ்வாறு வன்முறை ஒரு விஷ மட்டத்தை உருவாக்குகிறது.

“நமது பகைமையைய் காற்றிடம் காட்டலாம். தலையணையிடம் காட்டலாம்.அவை நம்மை எதிர்க்காது. நமக்கு மற்றொருவரின் பகைமையைய் உருவாக்காது”.


செய்யும் செயலில் கவனம்

ஒரு ஜென் மத குருவிடம் சீடன் ஒருவன் “தங்களுடைய கொள்கை என்ன என்று கேட்டார்?”. குருவின் பதில்… “பசி எடுத்ததால் சாப்பிடுவது, தூக்கம் வந்தால் தூங்குவது”. சீடர் மறுபடியும் இவ்வாறு கேட்டார். “பசித்தால் புசிப்பது, உறக்கம் வந்தால் உறங்குவது” இதைத்தான் எல்லோரும் செய்கிறார்களே என்றார். ஞானி சிரித்தார். மற்றவர்களுக்கும் எனக்கும் வேறுபாடு உள்ளது. நீங்கள் சாப்பிடும் போது உங்கள் மனம் சாப்பாட்டில் இருக்காது. அங்கும் இங்குமாக அலைபாயும். எதையோ நினைத்துக் கொண்டு, பேசிக் கொண்டு சாப்பிடுவீர்கள். நான் சாப்பிடும் போது சாப்பிட மட்டும் செய்கிறேன், வேறு எந்த சிந்தனையும் கிடையாது. நீங்கள் தூங்கும் போது உங்களது மனம் தூக்கத்தில் இல்லை, கவலையில், சிந்தனைகளில் மற்றும் குழப்பத்தில் அலைகிறீர்கள். ஆனால் தூக்கத்தின் போது நான் தூங்க மட்டுமே செய்கிறேன். “செய்வதைச் சரியாகச் செய்வதே யோகம்” என்று கீதை கூறுகிறது.

செய்யும் தொழிலில் ஒன்றிவிடும் போது, அது தியானமாகி விடுவதோடு செய்யப்படுவதும் முழுமையாக அமைந்து விடுகிறது. அத்துடன் செய்யும் தொழிலின் பாரம், துன்பம் எதுவும் இல்லாமல் போய்விடுகிறது.

Monday, May 11, 2009

அன்னையர் தினம் மே 11, திங்கள் 2009

ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் இரண்டாவது ஞாயிற்றுக் கிழமை அன்னையர் தினமாக கொண்டாடப்படுகிறது. இந்த அன்னையர் தின நன் நாளில் நாம் நம் தாயின், தாய்மையின் பெருமையைய் அறிவது மிகவும் புண்ணியமான விஷயமாகும். உங்களுக்காக "அன்னையர் தினம்" பற்றிய கட்டுரையைய் இங்கு சமர்ப்பிக்கிறேன்.

தாய்:தாய் தான் எல்லாவற்றிற்கும் மூலாதாரம்.எவள் இல்லை என்றால் நாம் இந்த உலகில் பிறந்திருக்கமுடியாதோ,எவளை நாம் இழந்து விட்டால் மீண்டும் பெற முடியாதோ அவளே தாய். அவளே நம் வாழ்க்கையின் அனைத்து தத்துவங்களையும் துவக்கி வைக்கிறாள். தாய் என்ற ஸ்தானத்தில் இருந்து தான் சகலமும் உருவாகிறது.

· தாய் – தாய் தான் ஜனனத்தை தோற்றுவிக்கிறாள்.
· தாய் – தந்தை, குரு, கடவுள் மற்றும் உறவுகளை அறிமுகப்படுத்துபவள்.
· தாய் – எந்த ஒரு தவறான செயலிலும் தடைவிதிப்பவள்.
· தாய் – மழலைப் பருவத்தில் பேசும் முதல் வார்த்தை ‘அம்மா’.
· தாய் – உள்ளுணர்வால் உந்தப் பெற்ற தத்துஞானி.
· தாய் – ‘வாடிய பயிரை கண்ட போதெல்லாம் வாடினேன்’ என்ற இராமலிங்க அடிகளார் பாடல் வரிகளைப் போல நமது ஒவ்வொரு துன்பத்தின் போதும் முதலில் கண்ணீர் சிந்துபவள்.
· தாய் – தனது குழந்தையின் ஒவ்வொரு வளர்ச்சியிலும் முன்னேற்றம் காண்பவள்.
· தாய் – தனது கருவறையில் வைத்து பத்து மாதம் உணவு ஊட்டக் கூடியவள். தாய்மை. தனது பிரசவ வலியில் இருக்கும் போது கூட வயிறு வலிக்கிறது என்று கூறாமல் குழந்தை என்னை உதைக்கிறது என்று கூறக்கூடிய பெருந்தகையவள்.


தாய், தாய்மை பற்றி இலக்கியங்கள் கூறுவது:
· தாய், தந்தை பேண் – (பேண் – விரும்பு. தாய், தந்தையைய் விரும்பு).
· விண்ணுலகம் மண்ணுலகம் இரண்டும் பெண்ணுலகத்தாலேயே வாழ்கிறது. பெண் இல்லை என்றால் இவ்வுலகமே இல்லை என்கிறது.
· தாய்நாடு – நாம் நம் நாட்டை ‘தாய்நாடு’ என்று தான் கூறுகிறோம்.
· தாய்மொழி – நாம் பேசுகின்ற மொழியைய் கூட ‘தாய்மொழி’ என்று தான் கூறுகிறோம்.
· ‘மாத்துரு தேவோ பதே பித்தரு தேவோ பதே’ – அம்மாவை சொல்லிதான் அப்பாவை சொல்லனும். அம்மா காட்டித்தான் குழந்தைக்கு அப்பாவைத் தெரியும். குரு நமஹ. அப்பா குருவை காட்டிய பின்பு தான் குருவை அறிவோம். இங்கு சந்தேகத்திற்கு இடமில்லாதது தாய்.

· அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்.
· அம்மையே அப்பா ஒப்பிலா மணியே.
· தந்தையைய் பார்க்கினும் தாய்க்கு பெருமை அதிகம்.
· மகன் சந்நியாசி ஆனப்பிறகும் வணங்கத் தக்கவள் தாய்.
· சிவத்துக்கு ஒரே இராத்திரி சிவராத்திரி. சிவராத்திரி அன்று பட்டினி போடுவார்கள். சக்திக்கு ஒன்பது இராத்திரி நவராத்திரி. தாய் ஒரு பொழுதும் தன் குழந்தையைய் பட்டினி போட மாட்டாள். ஆகையால் தான் நவராத்திரி அன்று இரவு பொங்கல், புளியோதரை என்ற சகல உணவுகளும் கோயில்களில் வழங்கப்படுகிறது.
· காலிலே மிதிபடுகிற மண்ணை பூமாதேவி - இந்த பூமியைய் தாங்கக் கூடியவள் பெண்.

· இன்று வரை மேற்கு வங்காள மாநிலத்தில் தாயைய் தட்டிலே நிறுத்தி அவளது காலை சுத்தம் செய்து ‘பாத பூஜை’ செய்கிறார்கள். அந்த கால் அலம்புகின்ற தண்ணீரை கங்காதேவி, ஆகாசவானி, கிரகலட்சுமி, தான்யலட்சுமி என்று கூறுகிறார்கள்.

· திருமணத்திற்காக பெண் பார்க்கும் போது கூட நேராக யாரும் பெண்ணைப் பார்ப்பது கிடையாது. ‘தாயைய் பார்த்து பெண்ணெடு’ என்று தான் கூறுகிறார்கள். ஒரு தாய் எப்படி இருக்கிறாளோ அதை வைத்து தான் அவள் வளர்க்கிற அந்த பெண்ணை பார்க்கிறார்கள்.

தாய்மை பற்றி கண்ணதாசன் கூறுவது:
· நான் என் தாயைய் வணங்குகிறேன். எனது வாழ்க்கைக்கு மனைவி ஒருத்தி துணையாக வந்து இருப்பாலேயானால் நான் வணங்குகின்ற என் தாயைய் அவளும் வணங்கி ஆக வேண்டும்.

· என் தாய் என்பவள் என் குடும்பத்தின் இராணி. அந்த ராணிக்குத் தோழி தான் என் மனைவி. அந்த மனைவி என்பவள் இராணி என்கிற அந்தஸ்த்தை ஒரு போதும் பெற முடியாது. அவளுக்கு வருகின்ற மருமகளுக்கு வேண்டுமானால் அவள் இராணியாக இருக்கலாமே தவிர என் தாயிக்கு கிடையாது.

தாய்மை பற்றி சுவாமி விவேகானந்தர் கூறுவது:
· அமெரிக்காவின் சிகாகோ மாநகரில் பேசுகையில் ‘தாய் மார்களே’ என்று தனது சொற்பொழிவை ஆரம்பித்தார். அப்பொழுது அங்கு இருந்த சில இளம்பெண்கள் சிரித்தார்கள். நாங்களோ இளம் பெண்கள், நமக்கு இன்னும் திருமணம் கூட ஆகவில்லை. நம்மைப் பார்த்து ‘தாயே’ என்று கூறுகிறாறே என்று சிரித்தார்கள். மேலை நாடுகளில் பெண் என்றாலே ‘மனைவி’ அல்லது ‘காதலி’ என்ற உணர்வுதான் பெருக்கெடுத்து ஓடுகிறது. ஆனால் எங்கள் நாட்டைப் பொறுத்தவரையில் பெண் என்றால் தாய் என்ற உணர்வு தான் வரும். தாய், தாயே என்று அழைப்பது எங்களது வழக்கமாகும்.

· பதினெட்டு வயது பெண்ணைப் பார்த்து அறுவது வயது முதியவர் பிச்சைக் கேட்கும் போது கூட ‘தாயே’ என்று தான் கேட்கிறார். ஏன், ஏழு வயது சிறுமியைய் பார்த்துக் கேட்கும் போது கூட ‘தாயே’ என்று தான் கேட்கிறாரே தவிர ‘சிறுமியே பிச்சை போடு’ என்று கேட்பது இல்லை. இது எங்களது தாய்மையைய் உணர்த்துகிறது.

திருக்குறள் கூறுவது:
தற்காத்துத், தற்கொண்டான் பேணித், தகைசான்ற
சொற்காத்துச், சோர்வுஇலாள் பெண்.
விளக்கம்: உடலாலும் உள்ளத்தாலும் தன்னைக் காத்து, தன் கணவனின் நலன்களில் கவனம் செலுத்தி, குடும்பத்திற்கு நலம் தரும் புகழைக் காத்து, அறத்தைக் கடைப்பிடிப்பதில் சோர்வடையாமல் இருப்பவளே பெண்.


"தாயிற் சிறந்ததொரு கோவிலும்இல்லை!!!"


Friday, May 8, 2009

செய்யும் செயலில் கவனம்

ஒரு ஜென் மத குருவிடம் சீடன் ஒருவன் “தங்களுடைய கொள்கை என்ன என்று கேட்டார்?”. குருவின் பதில்… “பசி எடுத்ததால் சாப்பிடுவது, தூக்கம் வந்தால் தூங்குவது”. சீடர் மறுபடியும் இவ்வாறு கேட்டார். “பசித்தால் புசிப்பது, உறக்கம் வந்தால் உறங்குவது” இதைத்தான் எல்லோரும் செய்கிறார்களே என்றார். ஞானி சிரித்தார். மற்றவர்களுக்கும் எனக்கும் வேறுபாடு உள்ளது. நீங்கள் சாப்பிடும் போது உங்கள் மனம் சாப்பாட்டில் இருக்காது. அங்கும் இங்குமாக அலைபாயும். எதையோ நினைத்துக் கொண்டு, பேசிக் கொண்டு சாப்பிடுவீர்கள். நான் சாப்பிடும் போது சாப்பிட மட்டும் செய்கிறேன், வேறு எந்த சிந்தனையும் கிடையாது. நீங்கள் தூங்கும் போது உங்களது மனம் தூக்கத்தில் இல்லை, கவலையில், சிந்தனைகளில் மற்றும் குழப்பத்தில் அலைகிறீர்கள். ஆனால் தூக்கத்தின் போது நான் தூங்க மட்டுமே செய்கிறேன். “செய்வதைச் சரியாகச் செய்வதே யோகம்” என்று கீதை கூறுகிறது.

செய்யும் தொழிலில் ஒன்றிவிடும் போது, அது தியானமாகி விடுவதோடு செய்யப்படுவதும் முழுமையாக அமைந்து விடுகிறது. அத்துடன் செய்யும் தொழிலின் பாரம், துன்பம் எதுவும் இல்லாமல் போய்விடுகிறது.

Thursday, May 7, 2009

அறம் செய்க

ஒரு ராஜாவின் அரண்மனையில் சிலம்பு ஒன்று காணாமல் போய்விட்டது. அரசனுக்கு கடுங்கோபம். சிலம்பைக் கண்டுபிடிக்க ஒற்றர்களை ஏவினார். சிலம்பை ஒரு மாதத்திற்குள் கண்டுபிடித்து தருபவர்களுக்கு நிறைய பொன், பொருள் பரிசாக அளிக்கப்படும் என்று கூறினார். அதற்கு பிறகு யாரிடமாவது இருந்து கண்டுபிடிக்கப்பட்டால் “மரண தண்டனை” என்றும் அறிவித்தார்.

அந்த ஊருக்கு புதிதாக வந்த துறவியின் கையில் சிலம்பு சிக்கியது. அந்த சிலம்பு பற்றி அங்குள்ள மக்களிடம் விசாரித்தார் துறவி. உடனே கொடுத்தால் பரிசு, குறிப்பிட்ட நாள்களுக்கு மேல் கொடுத்தால் “மரண தண்டனை” என்றனர். துறவி அரசர் குறிப்பிட்டிருந்த நாட்களுக்குப் பிறகு சிலம்பைக் கொண்டு சேர்த்தார். “இப்போது உமக்கு மரண தண்டனை கொடுக்க வேண்டி இருக்கும்” என்றார் அரசர்.

அற வழியில் நடந்த அந்த துறவியின் பதில்…

  • ஒன்று, கிடைத்ததும் ஓடோடி வந்து தந்திருந்தால் பரிசுக்கு ஆசை பட்டதாக இருக்கும்.
  • மரண தண்டனை கிடைக்கும் என்று நான் அஞ்சிக் கொடுக்காமலேயே இருந்தால் நான் சாவுக்குப் பயந்தவன் என்று அர்த்தமாகிவிடும் (மரணத்திற்கு பயப்படுவது இல்லை).
  • சிலம்பை அப்படியே வைத்துக் கொண்டால் பிறர் பொருளுக்கு ஆசைப்பட்டவன் என்று ஆகிவிடும். (நான் பிறர் பொருளை விரும்புவதே இல்லை)

“இப்போது உமக்கு மரண தண்டனை கிடைக்குமே” என்றார் அரசர். துறவி கம்பீரமாக அரசனைப் பார்த்து “மூடனே… அறவழியில் நடக்கும் ஒருவனை அழிக்க எந்த அரசுக்கும் அதிகாரம் இல்லை. தர்மம் சட்டத்தை விட மேலானது” என்று கூறி சென்றார். அரசர் தலைவணங்கி துறவியைய் அனுப்பி வைத்தார்.

“உங்களிடம் சிறந்ததை உலகத்திற்கு கொடுங்கள்.

உலகம், சிறந்ததை உங்களுக்கு கொடுக்கும்”.

சுயநலம்

புத்தரின் திருவுருவச் சிலை முன்பு ஊதுவத்திகளை ஏற்றி வழிபடும் வழக்கம் கொண்ட பெண் ஒருத்தி இருந்தாள். அவள் எங்கே சென்றாலும் தன்னோடு தங்கத்தாலான ஒரு புத்தரின் சிலையைய் எடுத்துச் செல்வாள். போகும் இடமெல்லாம் புத்தரின் சிலைக்கு ஊதுவத்தி ஏற்றி வழிபடுவாள். ஆனால் அந்த ஊதுவத்தியின் நறுமணத்தை அடுத்தவர்கள் நுகர்ந்துவிடக் கூடாது என்ற சுயநல எண்ணம் கொண்டவள். அதனால், ஊதுவத்தியில் இருந்து ஒரு குழாயைய் புத்தரின் மூக்குக் குழாய்க்கு பொறுத்தி விட்டாள். இதனால் நாளாக நாளாக தங்க மூக்கு கறுத்துவிட்டது. இது சுயநலம் பற்றி ஜென் மதத்தினர் சொல்லும் கறுப்பு மூக்கு புத்தர் கதை.

நாமும் சில சமயங்களில் இந்த பெண்மணியைய் போலத்தான் தாம் செய்வது தான் சரி என்றும் தான் செய்கின்ற செயல் மற்றவர்களுக்கு தெரியக்கூடாது அதனால் அவர்கள் பயனடையக்கூடாது என்ற சுயநலத்துடனும் வாழ்கிறோம். இது போன்ற செயல்களை செய்கையில் புத்தருக்கு மூக்கு கறுத்தது போல் சில சமயங்களில் நமக்கும் தீமையே விளைகின்றன தவிர நன்மை அல்ல..

உதவி பெறுபவர் மகிழ்ச்சியைவிட, கொடுப்பவர் மகிழ்ச்சியே நிலையானது!!!

குணம்

துறவி ஒருவர் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தபோது மரத்தின் மேலிருந்து தண்ணீரில் தேள் ஒன்று விழுந்து விட்டது. தண்ணீருக்குள் கை விட்டுத் தேளைத் தூக்கினார் துறவி. தன்னைக் காப்பாற்றுகிறார் என்ற எண்ணமின்றி நறுக்கென்று கொட்டியது தேள். துடித்து தேளைத் தவறி, தண்ணீரில் விட்டார் துறவி. மறுபடியும் கருணையோடு தூக்கினார் மறுபடியும் கொட்டியது. எத்தனை முறை முயன்றாலும் அதே கதை. கரையிலிருந்து ஒருவர் கேட்டார். சுவாமி, தேள் தான் கொட்டுகிறது… திரும்பத் திரும்ப ஏன் கொட்டுப்படுகிறீர்கள். விட்டுவிட வேண்டியது தானே.

துறவியின் பதில்… “கொட்டுவது தேளின் இயற்கை குணம். காப்பாற்றுவது மனிதனின் இயற்கை குணம். அதனுடைய இயல்பை அது விடாத போது என்னுடைய இயல்பை மட்டும் ஏன் நான் விட வேண்டும்”.

துறவிக்கு இருந்த இந்த குணத்தை வள்ளுவன் ஒரு படி மேல் சென்று இந்த குணநலன்களே ஒரு “மாளிகையின் தூண்கள்” என்று தனது சான்றாண்மை எனும் அதிகாரத்தில் குறிப்பிடுகிறார்.

குறள்:

அன்பு, நாண், ஒப்புரவு, கண்ணோட்டம் வாய்மையோடு

ஐந்துசால்பு ஊன்றிய தூண்.

பொருள்: மற்றவரிடம் அன்பு, பழி பாவங்களுக்கு நாணுதல், சேர்த்ததைப் பிறர்க்கும் வழங்கும் ஒப்புரவு, நெடுங்காலப் பழக்கத்தாரிடம் முக தாட்சண்யம், உண்மை பேசுதல் என்னும் ஐந்தும் சான்றாண்மை என்னும் மாளிகையைத் தாங்கும் தூண்கள்.

தாழாதே! எவரையும் தாழ்த்தாதே!!!

பதற்றம்

பேச்சாளர் சுகி. சிவம் அவர்களின் தந்தையார் பெயர் அமரர் சுகி. சுப்பிரமணியம். ஒரு முறை அவருக்கு மாரடைப்பு வந்த பொழுது அவரை ஒரு மருத்துவமனையின் மாரடைப்பு பிரிவில் சேர்த்தார்கள். அங்கிருந்த நடுத்தர வயது மருத்துவர் சிகிச்சை அளிப்பதற்கான ஏற்பாடுகளில் பரபரப்புடன் இறங்கினார். பதற்றமும், படபடப்பும் தொற்றிக் கொள்ள பம்பரமாய்ச் சுழன்றார். அவ்வப்போது செவிலித் தாய்களையும் திட்டினார்.

இவற்றையெல்லாம் படுக்கையில் படுத்துக் கொண்டிருந்தபடியே அமைதியாக கவனித்துக் கொண்டிருந்த சுகி. சுப்ரமணியம் அவர்கள் அந்த மருத்துவரை அருகில் அழைத்து, “டாக்டர்! உங்களுக்கு வாழ வேண்டிய வயது. இவ்வளவு பதற்றப்படாதீர்கள். அது உங்களது நரம்பு மண்டலத்தைத் தாக்கி இதயத்தைப் பாதிக்கும். எனக்கு சிகிச்சை அளிப்பதற்காக நீங்கள் இவ்வளவு பரபரப்புக்கு ஆளாக வேண்டிய அவசியமேயில்லை. நான் வாழ்க்கையின் கடைசி அத்தியாயத்திற்கு வந்து விட்டேன்! ஆனால் உங்களுக்கு இன்னும் நிறைய அத்தியாயங்கள் உண்டு கவனமாயிருங்கள்” என்றார். இதைக் கேட்டதும் மருத்துவரின் கண்கள் கலங்கி விட்டன.

“என் மருத்துவத்துறையனுபவத்தில் இது வரைக்கும் இப்படிப்பட்ட மனிதரை நான் பார்தததேயில்லை, எல்லோரும் தங்கள் உயிரை எப்படியாவது காப்பாற்றி விடும்படித்தான் என்னிடம் மன்றாடுவார்கள். ஆனால் மருத்துவனான என்னைப் பற்றி அக்கறை கொண்டு ‘உன்னைக் காப்பாற்றிக் கொள்’ என்று சொன்ன முதல் நோயாளியை இன்று தான் பார்க்கிறேன் என்று கூறி நெகிழ்ந்தார்.

பதறிய காரியம் சிதறும்!!!

பொறுமை

கங்கை ஆற்றில் குளித்துவிட்டு கரையேறிய ஞானி ஒருவர் மீது வெற்றிலை பாக்கு எச்சிலை துப்பினான் முரடன் ஒருவன். ஞானி வருத்தமின்றி மீண்டும் கங்கையில் நீராடி கரையேறினார். மீண்டும் துப்பினான். இவ்வாறு ஒருமுறை இரண்டு முறை அல்ல நூறு முறை துப்பினான். ஞானிக்கு கோபமோ, துயரமோ துளி கூட இல்லை. அவர் நூறு முறை நீராடினார். முரடன் மனம் வருந்தி ஞானியின் காலில் விழப்போனான். ஞானி தடுத்தார். “முரடனே... நானல்லவா உன்னை வணங்க வேண்டும். ஒரே நாளில் இந்த புனித கங்கையில் நூறு முறை நீராடுவது நடக்கக் கூடிய காரியமா? உன்னால்தான் அது முடிந்தது. உனக்கு நான் தான் மிகவும் நன்றி சொல்ல கடமைப் பட்டிருக்கிறேன்” என்றார் ஞானி.

“சுவாமி… என்னை மன்னிக்க வேண்டும். இந்த ஊரில் உள்ள ஒரு செல்வர் தங்கள் புகழைப் பொறுக்காது என்னைத் தூண்டிவிட்டார். நீங்கள் கோபம் வந்து என்னைத் திட்டுவீர்கள் திட்டினால் உங்களை கட்டிப் பிடித்து மண்ணில் புரண்டால் உங்கள் பெயர் கெடும். அப்படி நடந்தால் பொன் தருகிறேன் என்றார் செல்வந்தர். அந்தப் பொன்னுக்கு ஆசைப்பட்டு இப்படி நடந்து கொண்டு விட்டேன்” என்று கூறிக் குறுகி நின்றான் முரடன்.

ஞானியின் பதில்… “முரடனே, இது எனக்கு முன்னாலே தெரியாமல் போய்விட்டதே! என்னால் உனக்கு ஒரு பொன் கிடைக்கும் என்று எனக்குத் தெரிந்திருந்தால் உன்னை கட்டிப் புரண்டு கூட சண்டைப் போட்டிருந்திருப்பேன்” என்றார் ஞானி. ஞானிகள் “துன்பத்திற்கு துன்பப் பட மாட்டார்கள்”.