Thursday, September 30, 2010

சிந்தனைகள்

01 அக்டோபர் 2010

சிந்தனைகள்

· ஒரு காரியத்தை செய்ய முடியும் என்று நீங்கள் நம்பினாலும், அந்த காரியத்தைச் செய்ய முடியாது என்று நீங்கள் நம்பினாலும் இரண்டுமே சரிதான்.
· தடைகள், சோதனைகள், பிரச்சனைகள் இல்லாவிட்டால் வாழ்க்கைக்கு அர்த்தம் இல்லாமல் போய்விடும்.
· பிரச்சனைகள் இல்லாமல் இருப்பதே மகிழ்ச்சி என்று ஆகிவிடாது. கஷ்டங்களை வெற்றி கொள்ளுவதிலும், பிரச்சனைகளைத் தீர்ப்பதிலும்தான் மகிழ்ச்சியே இருக்கிறது.
· உங்களால் வெற்றி பெற முடியும் என்று உங்களை நம்ப வைக்கின்ற மெய்யான, நம்பகமான தகவல்களால் நீங்கள் உற்சாகப்பட முடியும்.
· விதி ஒரு கதவை மூடுகின்ற போது, நம்பிக்கை இன்னொரு கதவைத் திறந்து வைக்கிறது என்பது வாழ்க்கையின் நியதி.
· ஒரு மனிதன் எதைக் கற்பனை செய்து அதில் நம்பிக்கை வைக்கிறானோ அதை நிச்சயம் அடைகிறான்.
· மனதை ஒன்றிலேயே ஒரு நிலைப்படுத்த முடியுமானால், இப்போது நாம் சாதிப்பதைவிட எத்தனையோ மடங்கு அதிகமாகச் சாதிக்க முடியும்.
· நாம் என்ன நினைக்கிறோமோ அதுவாகத்தான் நாம் இருக்கிறோம். நாம் இனி என்ன ஆகப்போகிறோம் என்பதையும் அதுதான் நிர்ணயிக்கிறது.
· ஒருவன் எதை நினைக்கிறானோ அதுவாகவே இருக்கிறான் என்கிறது பைபிள்.

குறிப்பு: தங்களது நண்பர்கள், உறவினர்கள், குடும்பத்தினர்கள், சகஊழியர்கள் என எவரேனும் இந்தச் சேவையை பெற விரும்பினால் தயவு செய்து அவர்களது மின்னஞ்சலை எமக்கு தெரியப்படுத்தவும். தெரியப்படுத்த வேண்டிய மின்னஞ்சல் ananthprasath@drcet.org | Subscribe | Unsubscribe.

கல்விச் சேவை பற்றி அறிய மற்றும் எங்களது இந்த கல்விச் சேவைக்கு உதவி ஏழை குழந்தைகளின் கல்வி தரத்தை உயர்த்திட - DRCET

எமது நிறுவனம் மற்றும் தொழில் பற்றி அறிய - Web Designing Company

Wednesday, September 29, 2010

இந்தியர்கள்

30 செப்டம்பர் 2010

இந்தியர்கள்

இந்தியக் குடியரசுத் தலைவராக இருந்த பொழுது டாக்டர். இராதாகிருஷ்ணன், ஆங்கிலேயர்களின் பாராட்டு விருந்து ஒன்றிற்கு சென்று இருந்தார். அப்போது ஓர் ஆங்கிலேயர், “ஆண்டவனுக்கு எங்கள் மாதிரி ஆங்கிலேயரிடம் தான் அன்பு அதிகம்! அவர் முயற்சி செய்து அதிக விருப்பத்தோடு எங்களைப் படைத்தார். அதனாலேதான் எங்களது உடல் இவ்வளவு வெண்மையாக இருக்கிறது!” என்று கூறினார்.

அப்போது, கூட்டத்தில் இருந்த டாக்டர் இராதாகிருஷ்ணன் சிரித்துக் கொண்டே இவ்வாறு பதில் கூறினார். “நண்பர்களே! ஒரு சமயம் ஆண்டவன் ரொட்டி தயாரிப்பதற்கு ஆசைப்பட்டார். உடனே அதற்கான முயற்சியில் இறங்கினார். முதல் ரொட்டியைச் சுட்டார். அது சரியாக வேகவில்லை. அதனாலே வெள்ளையாகச் சிலர் பிறந்தார்கள்! இரண்டாவதாக ஒரு ரொட்டியைச் சுட்டார். அது நிறைய நேரம் வெந்து விட்டது. அதனாலே கருப்பாகச் சிலர் பிறந்தார்கள். ஆண்டவன் இப்படி இரண்டு முறை அனுபவப்பட்டதற்கு பிறகு, மூன்றாவது முறை சரியான பக்குவத்தில் ரொட்டியைய் தயார் செய்தார். அது அரை வேக்காடகவும் போகவில்லை. கரிஞ்சும் போகவில்லை. அதன் காரணமாக இந்தியர்களாகிய நாங்கள் பிறந்தோம்”.

இதைக் கேட்டதும் கூட்டத்தில் இருந்த அனைவரும் சிரித்து விட்டார்கள். இந்நிகழ்ச்சி வேடிக்கையாக இருந்தாலும் கூட “இந்தியர்கள ஒரு பக்குவமான மானிடப் படைப்பு” என்பதை உறுதி செய்கிறது.

குறிப்பு: தங்களது நண்பர்கள், உறவினர்கள், குடும்பத்தினர்கள், சகஊழியர்கள் என எவரேனும் இந்தச் சேவையை பெற விரும்பினால் தயவு செய்து அவர்களது மின்னஞ்சலை எமக்கு தெரியப்படுத்தவும். தெரியப்படுத்த வேண்டிய மின்னஞ்சல் ananthprasath@drcet.org | Subscribe | Unsubscribe.

கல்விச் சேவை பற்றி அறிய மற்றும் எங்களது இந்த கல்விச் சேவைக்கு உதவி ஏழை குழந்தைகளின் கல்வி தரத்தை உயர்த்திட - DRCET

எமது நிறுவனம் மற்றும் தொழில் பற்றி அறிய - Web Designing Company

Monday, September 27, 2010

ஆறு கட்டளைகள்

28 செப்டம்பர் 2010

கவியரசு கண்ணதாசனின் ஆறு கட்டளைகள்

ஒன்றே சொல்வார் ஒன்றே செய்வார்

உள்ளத்தில் உள்ளது அமைதி!

இன்பத்தில் துன்பம் துன்பத்தில் இன்பம்

இறைவன் வகுத்த நியதி!

சொல்லுக்குச் செய்கை பொன்னாகும், வரும்

இன்பத்தில் துன்பம் பட்டாகும் – இந்த

இரண்டு கட்டளை அறிந்த மனதில்

எல்லா நன்மையும் உண்டாகும்!


உண்மையைச் சொல்லி நன்மையைச் செய்தால்

உலகம் உன்னிடம் மயங்கும்! – நிலை

உயரும்போது பணிவு கொண்டால்

உயிர்கள் உன்னை வணங்கும்!

உண்மை என்பது அன்பாகும் – வெரும்

பணிவு என்பது பண்பாகும் – இந்த

நான்கு கட்டளைகள் அறிந்த மனதில்

எல்லா நன்மையும் உண்டாகும்!

ஆசை, கோபம், களவு கொள்பவன்

பேசத் தெரிந்த மிருகம்!

அன்பு, நன்றி, கருணை கொண்டவன்

மனித வடிவில் தெய்வம்!

இதில் – மிருகம் என்பது கள்ளமனம்

உயர் – தெய்வம் என்பது பிள்ளைமனம்

இந்த – ஆறு கட்டளை அறிந்தமனது

ஆண்டவன் வாழும் வெள்ளைமனம்!

குறிப்பு: தங்களது நண்பர்கள், உறவினர்கள், குடும்பத்தினர்கள், சகஊழியர்கள் என எவரேனும் இந்தச் சேவையை பெற விரும்பினால் தயவு செய்து அவர்களது மின்னஞ்சலை எமக்கு தெரியப்படுத்தவும். தெரியப்படுத்த வேண்டிய மின்னஞ்சல் ananthprasath@drcet.org | Subscribe | Unsubscribe.

கல்விச் சேவை பற்றி அறிய மற்றும் எங்களது இந்த கல்விச் சேவைக்கு உதவி ஏழை குழந்தைகளின் கல்வி தரத்தை உயர்த்திட - DRCET

எமது நிறுவனம் மற்றும் தொழில் பற்றி அறிய - Web Designing Company

Sunday, September 26, 2010

அவமானம்

27 செப்டம்பர் 2010

அவமானம்

அண்மையில் கவியரசர் கண்ணதாசன் பற்றி அவரது அருமை மகள் காந்தி கண்ணதாசன் ஒரு செய்தி சொன்னார். செட்டிநாட்டிலிருந்து எழுத்துக் கனவுகளுடன் பதினான்கு வயசுப் பையனாக சென்னை வந்தார் கவியரசு கண்ணதாசன். அன்று இரவு படுக்க இடமின்றி மெரினா கடற்கரையில் காந்தி சிலைக்குப் பின்னால் பெட்டியைத் தலைக்கு வைத்து படுத்திருக்கிறார் கவிஞர்.

நள்ளிரவு போலீஸ்காரரின் உருட்டுத்தடி அவரைத் தட்டி மிரட்டியது. நகரத்தார் விடுதிக்குப் போக வேண்டும். இரவு மண்ணாடி வரை நடந்து போக முடியாது. அதனால் கடற்கரையில் படுத்துக் கொள்ள அனுமதி கேட்ட அந்தப் பதினான்கு வயதுப் பையனின் கோரிக்கையைப் போலீஸ் நிராகரித்தது. “படு…படுக்கணும்னா நாலணா கொடு” என்று காவல் மிரட்டியது. நாலணாவுக்கு வழியின்றிக் கலங்கிய கண்களுடன் காந்தி சிலையில் இருந்து நடந்திருக்கிறார் கண்ணதாசன்.

அவர் வளர்ந்து கவியரசாகி “சுமைதாங்கி” என்ற சொந்தப்படம் எடுக்கிறார். கதாநாயகனாக நடித்த ஜெமினி கணேசனை எங்கிருந்து நடக்க விடுவது என்று யோசித்த கவிஞர் அதே காந்தி சிலையைத் தேர்ந்தெடுத்தார்.

நள்ளிரவு படப்பிடிப்பு. ஆனால் படத்தில் இரவு ஏழு மணி மாதிரி இருக்க கடற்கரை ரோட்டில் நிறைய கார்கள் வரிசையாக வர வேண்டும். ஏழு கார்களை நிற்க வைத்து மாறிமாறி ஒன்றன்பின் ஒன்றாக வருகிற மாதிரி படம் எடுக்கிறார்கள். வீட்டில் இந்தப் படத்தைப் பார்த்துச் சொல்லியருக்கிறார். “இந்தக் கார்களை கவனித்தீர்களா? இவை எல்லாமே நம்முடைய கார்கள். வாழ முடியும் என்று நம்பிக்கையோடு சென்னை வந்த என்னை இந்த இடத்தில்தான் நாலணா இல்லை என்று போலீஸ் நடக்கவிட்டது… இதே இடத்தில் என் ஏழு கார்களை ஓடவிட்டுப் படம் எடுத்திருக்கிறேன். நம்பிக்கை என்னை ஜெயிக்க வைத்துவிட்டது” என்றாராம்.

எங்கு அவமதிக்கப்பட்டாரோ அங்கு கவியரசர் தம் வெற்றியை அரங்ககேற்றியிருக்கிறார். அவமானம் ஒரு மூலதனம்.

கவியரசு அவர்களின் மெய்சிலிர்க்கும் பாடல் வரிகளில் ஒரு சில…

“நான் நிரந்தரமானவன் அழிவதில்லை!

எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை!!”

“போற்றுவார் போற்றட்டும் புழுதி வாரித்

தூற்றுபவர் தூற்றட்டும் தொடர்ந்து செல்வேன்

ஏற்றதொரு கருத்தை எனதுள்ளம் என்றால்

எடுத்துரைப்பேன் எவர்வரினும் நில்லேன்; அஞ்சேன்”

குறிப்பு: தங்களது நண்பர்கள், உறவினர்கள், குடும்பத்தினர்கள், சகஊழியர்கள் என எவரேனும் இந்தச் சேவையை பெற விரும்பினால் தயவு செய்து அவர்களது மின்னஞ்சலை எமக்கு தெரியப்படுத்தவும். தெரியப்படுத்த வேண்டிய மின்னஞ்சல் ananthprasath@drcet.org | Subscribe | Unsubscribe.

கல்விச் சேவை பற்றி அறிய மற்றும் எங்களது இந்த கல்விச் சேவைக்கு உதவி ஏழை குழந்தைகளின் கல்வி தரத்தை உயர்த்திட - DRCET

எமது நிறுவனம் மற்றும் தொழில் பற்றி அறிய - Web Designing Company

Friday, September 24, 2010

அடிமையாக்க ஆசைப்படாதே

24 செப்டம்பர் 2010

அடிமையாக்க ஆசைப்படாதே

ஜார்ஜ் வாஷிங்டன் அமெரிக்காவின் முதல் ஜனாதிபதி. அவர் தலைமையில் அமெரிக்காவில் போர் நடந்து கொண்டிருந்த சமயம். பத்துப் பதினைந்து போர் வீரர்கள் ஓர் உத்திரத்தைப் படாத பாடுபட்டு நகர்த்திக் கொண்டிருந்தார்கள். அவர்கள் குழுவின் தலைவன் குதிரையில் அமர்ந்தபடி அவர்களை அதட்டி உருட்டி வேலை வாங்கிக் கொண்டிருந்தான். அவர்கள் ஒரு குறிப்பிட்ட உயரத்திற்கு அந்த உத்திரத்தை நகர்த்த முடியாதபடி அதிகச் சிரமப்பட்டார்கள். வேகமாக அதட்டினான் அந்தக் குழுவின் தலைவன்.

அப்போது அங்கு குதிரையில் வந்த வீரன் ஒருவன் தலைவனைப் பார்த்து, “அவர்கள் இவ்வளவு கஷ்டப்படுகிறார்களே… நீயும் அவர்களோடு சோர்ந்து அதை நகர்த்தக் கூடாதா?” என்று கேட்டான். குழுத்தலைவன், “நான் யார் தெரியுமா? அவர்களின் தலைவன்… அவர்களோடு சமமாக வேலை செய்ய முடியுமா?” என்று உறுமினான்.

குதிரையில் வந்தவன் இறங்கி, வீரர்களுக்கு உதவி, உத்தரத்தை நகர்த்தி அதன் இடத்தில் வைத்து விட்டுப் பிறகு தனது குதிரையில் ஏறி அமர்ந்தான். அந்தக் குழுவின் தலைவனைப் பார்த்து, “இனி இப்படிக் கடினமாக வேலை ஏதாவது இருந்தால் எனக்குச் சொல்லி அனுப்புங்கள். அவசியம் நான் வந்து உதவுகிறேன்” என்று உரக்கச் சொன்னான்.

நீ யார்? உனக்கு எப்படிச் சொல்லி அனுப்புவது? உன் இருப்பிடம் எது? என்று அலட்சியமாகக் குழுத்தலைவன் கேட்டான். “நானா… ஜார்ஜ் வாஷிங்டன். உங்களின் தலைமைத் தளபதி” என்று அழுத்தமாகக் கூறி விட்டுக் குதிரையைத் தூண்டிச் சிட்டாய் பறந்தார் ஜார்ஜ் வாஷிங்டன்.

தனியாய் இரு!

தலைவனாய் இரு!!

அடிமையாகாதே! அடிமையாக்காதே!!

குறிப்பு: தங்களது நண்பர்கள், உறவினர்கள், குடும்பத்தினர்கள், சகஊழியர்கள் என எவரேனும் இந்தச் சேவையை பெற விரும்பினால் தயவு செய்து அவர்களது மின்னஞ்சலை எமக்கு தெரியப்படுத்தவும். தெரியப்படுத்த வேண்டிய மின்னஞ்சல் ananthprasath@drcet.org.

கல்விச் சேவை பற்றி அறிய மற்றும் எங்களது இந்த கல்விச் சேவைக்கு உதவி ஏழை குழந்தைகளின் கல்வி தரத்தை உயர்த்திட - DRCET

எமது நிறுவனம் மற்றும் தொழில் பற்றி அறிய - Web Designing Company

Wednesday, September 22, 2010

அசாதாரண மனிதர்கள் – II

23 செப்டம்பர் 2010

அசாதாரண மனிதர்கள் – II

அது ஒரு நாலு வயதுக் குழந்தை. ஆசை ஆசயாய் அந்தக் குழந்தையை அலங்காரம் செய்து பள்ளிக்கூடம் அனுப்பினாள் அம்மா. அந்தக் குழந்தைக்கு கொஞ்சம் காது மந்தம். ‘டாமி’ என்பது குழந்தையின் செல்லப் பெயர். மனம் நிறைய கனவுகளுடன் அந்தக் குழந்தையைப் பள்ளிக்கு அனுப்பிய தாயாருக்கு நெஞ்சு நிறைய சோகங்களை பரிசளித்தார் ஓர் ஆசிரியை. மூன்று மாதம் பள்ளிக்கூடம் சென்று வந்த அந்தக் குழந்தையின் சட்டைப்பையில் ஒரு காகிதத்தை திணித்து அனுப்பியிருந்தார் ஆசிரியை. “படிப்பதற்கு இலாயக்கற்ற முட்டாள் உங்கள் டாமி. இவனை இனிமேல் பள்ளிக்கு அனுப்பித் தொந்தரவு செய்ய வேண்டாம்” என்று அதில் எழுதியிருந்தது. குழந்தையை வாரி அணைத்துக் கொண்டு அந்தத் தாய் சொன்னாள், “என் மகன் அறிவாளி. நானே படிக்க வைப்பேன். அறிவாளி ஆக்குவேன்” என்று ஆவேசமாக அறிவித்தாள். “படிக்கலாயக்கில்லை” என்று முத்திரை குத்தப்பட்ட அந்த பையனைப் பற்றி, அவன் கண்டுபிடிப்புகள் பற்றி இன்றைக்குக் கூடப் பிள்ளைகள் படித்துக் கொண்டே இருக்கிறார்கள். அந்த முட்டாள் டாமிதான் 1093 கண்டுபிடிப்புகள் நிகழ்த்திய தாமஸ் ஆல்வா எடிசன். பள்ளிக்கூடம் போகாத பையனைப் பற்றி பள்ளிக்கூடம் பள்ளிக்கூடமாக இன்று பாடம் நடக்கிறது போதுமா? சாதாரண மனிதர்களே அசாதாரணர்கள்.

எடிசனுடைய அறுபத்து ஏழாவது வயதில் அவருக்கு நேர்ந்த விபத்து தாங்கக்கூடியதே அல்ல. பாடுபட்டு அவர் உருவாக்கிய பல லட்சம் பொறுமான அவரது ஆய்வுக்கூடம், தொழிற்சாலை பற்றி எரிந்தது. இன்ஷீரன்ஸ் தொகையோ அதிகம் வராது. பற்றி எரியும் தொழிற்கூடத்தைப் பார்த்து எடிசன் சொன்னார். “நல்லது. என் தவறுகள் யாவும் எரிந்து போயின. என் பிழைகள் யாவும் கருகிவிட்டன. இந்த அழிவிலும் ஒரு நன்மை இருக்கிறது. கடவுளுக்கு நன்றி. இனி ஒரு புதிய தொடக்கம் உண்டு” என்றார். இந்த தீ விபத்து நடந்த மூன்றே வாரத்தில் அவர் ‘போனோகிராப்’ என்பதைக் கண்டுபிடித்தார்.

Tuesday, September 21, 2010

அசாதாரண மனிதர்கள்

22 செப்டம்பர் 2010

அசாதாரண மனிதர்கள்

இன்றைய சராசரி சாதாரண மனிதர்களே, பிற்காலத்தில் அசாதாரண மனிதர்கள் ஆகின்றனர். பிறவியிலேயே யாரும் அசாதாரண மனிதர்கள் அல்லர். இதற்கு உதாரணமாக பலரைக் கூறலாம்.

ஜெர்மானியராகப் பிறந்தவர் விஞ்ஞானமேதை ஐன்ஸ்டீன். நாஜிகலால் நாடு கடத்தப்பட்டவர். அமெரிக்காவில் அடைக்கலம் புகுந்தவர். அமெரிக்காவில் பிரின்ஸ்டன் நகரில் உள்ள ஆராய்ச்சி சாலை அவருக்காக ஒதுக்கப்பட்டது. முதல் முறையாக அந்த ஆராய்ச்சி சாலைக்கு அவரை அழைத்துச் சென்று சுற்றிக்காட்டி அவருக்கு திருப்த்திதானா? ஏதும் வசதிக் குறைவுகள் உள்ளனவா என்று அமெரிக்க விஞ்ஞானிகள் விசாரித்தனர்.

தயங்கித் தயங்கி மெதுவான குரலில் ஐன்ஸ்டீன் சொன்னார். “இங்கு எல்லாம் வசதியாகவே இருக்கிறது. ஒரே ஒரு குறை” என்று இழுத்தார். “என்ன என்று சொல்லுங்கள் உடனே சரி செய்யப்படும்” என்றனர். அமெரிக்க விஞ்ஞானிகள் அறை ஓரத்தில் இருந்த குப்பைக் கூடையைச் சுட்டிக்காட்டி, “இது ரொம்பவும் சிறியதாக இருக்கிறதே, கொஞ்சம் பெரிய குப்பைத்கூடை இருந்தால் நல்லது” என்றார். திகைத்துப் போய் “பெரிய குப்பைக்கூடையா? எதற்கு?” என்றார்கள்.

ஐன்ஸ்டீன் சொன்னார், “நான் என்ன மேதாவியா, எல்லா ஆராய்ச்சிகளையும் முதலிலேயே சரியாகச் செய்ய… தப்புத் தப்பாகச் செய்வேன். எழுதி எழுதிப் பார்த்தால் எல்லாம் தப்புத் தப்பாக இருக்கும். உடனே கிழித்து எறிந்து விட்டு மீண்டும் மீண்டும் எழுதுவேன். இந்த முட்டாளுக்கு ஒரு விஷயத்தை சரியாகச் செய்ய நிறைய சந்தர்ப்பம் வேண்டும். தவறுகளைப் புதைக்க கொஞ்சம் பெரிய குப்பைக் கூடையும் வேண்டும்” என்றார். அவரே அப்படி என்றால்… நாமெல்லாம் எப்படி?

சாதாரண மனிதர்களில் இருந்துதான் அசாதாரணர்கள் தோன்றுகிறார்கள். நாம் சாதாரணம் என்று சாதாரணமாகி விடவேண்டாம். நாம் ஜெயிக்கப் பிறந்தவர்கள். சின்னச் சினனத் தோல்விகள். சின்னச் சின்னச் சறுக்கல்கள்… வீழ்ச்சிகள் ஒரு பெரிய விஷயமே அல்ல. எதை இழந்தாலும் நம்பிக்கையை இழக்காதீர்கள்.

இந்த ஆழ்ந்த நம்பிக்கையால் தான் உலக வரலாற்றில் இடம்பெற்றுள்ள அனைவரும் சாதாரண மனிதர்களாக இருந்து அசாதாரண மனிதர்களாக மாறியுள்ளனர்.

நம்பிக்கை! அதுவே மனிதனின் அஸ்திவாரம்!!

குறிப்பு: தங்களது நண்பர்கள், உறவினர்கள், குடும்பத்தினர்கள், சகஊழியர்கள் என எவரேனும் இந்தச் சேவையை பெற விரும்பினால் தயவு செய்து அவர்களது மின்னஞ்சலை எமக்கு தெரியப்படுத்தவும். தெரியப்படுத்த வேண்டிய மின்னஞ்சல் ananthprasath@drcet.org.

கல்விச் சேவை பற்றி அறிய மற்றும் எங்களது இந்த கல்விச் சேவைக்கு உதவி ஏழை குழந்தைகளின் கல்வி தரத்தை உயர்த்திட - DRCET எமது நிறுவனம் மற்றும் தொழில் பற்றி அறிய - Web Designing Company

Thursday, September 16, 2010

இரு சகோதரர்கள்

16 செப்டம்பர் 2010

இரு சகோதரர்கள்

சகோதரர்கள் இருவர் அவர்களின் குடும்பப் பண்ணையில் ஒன்று சேர்ந்து உழைத்தனர். சகோதரர்களில் திருமணமானவனுக்குப் பெரிய குடும்பம் இருந்தது. மற்றவன் தனிக்கட்டை. ஒரு நாள் சகோதரர்கள் குடும்பசொத்துக்களை சரிசமமாகப் பிரித்துக் கொண்டனர். விளைச்சல், லாபம் எல்லாவற்றையும். ஒரு நாள் பிரம்மச்சாரி சகோதரன் நினைத்தான், மகசூல் லாபத்தையெல்லாம் நாங்கள் சரிசமமாகப் பங்கீட்டுக் கொண்டது சரியல்ல. நான் தனியாள். எனக்கான தேவைகள் குறைவு. ஆகவே, அவன் தினமும் இரவில் ஒரு மூட்டை தானியத்தைத் தூக்கி, சகோதரனின் தானியக்கிடங்கு பக்கமாகத் தள்ளிவிட்டான்.

அதேநேரம், திருமணமான சகோதரன் இப்படி யோசித்தான். ‘உற்பத்தி லாபத்தை எல்லாம் இருவரும் சமமாகப் பிரித்துக் கொண்டது முறையல்ல. என்னை கவனித்துக் கொள்ள மனைவி, குழந்தை குட்டியென்று இருக்கிறார்கள். சகோதரனுக்கு என்று யாரும் இல்லை. அவனுக்குத்தான் பங்கு அதிகமாகத் தேவை’. எனவே ஒவ்வொரு நாள் இரவும் ஒரு மூட்டை தானியத்தை தூக்கி பிரமச்சாரி சகோதரனின் தானியக்கிடங்கு பக்கமாகப் போட்டான்.

நாட்கள் பல கடந்தாலும் தத்தமது தானிய இருப்புக் குறையாமல் இருப்பதைப் பார்த்துக் குழம்பினர் சகோதரர்கள் இருவரும். இந்நிலையில் ஒரு நாள் இரவு சகோதரர்கள் தானிய மூட்டைகளைத் தூக்கிக் கொண்டு அடுத்தவர் பக்கமாக ஒரே நேரத்தில் போக, எதிரெதிரே சந்தித்துக் கொண்டனர். அதுவரை என்ன நடந்திருக்கிறது என்பதையும் புரிந்து கொண்டனர். உடனே சகோதரர்கள் மூட்டைகளைப் போட்டுவிட்டு ஓடிப்போய் ஒருவரையொருவர் ஆரத் தழுவிக் கொண்டனர்.

குறிப்பு: தங்களது நண்பர்கள், உறவினர்கள், குடும்பத்தினர்கள், சகஊழியர்கள் என எவரேனும் இந்தச் சேவையை பெற விரும்பினால் தயவு செய்து அவர்களது மின்னஞ்சலை எமக்கு தெரியப்படுத்தவும். தெரியப்படுத்த வேண்டிய மின்னஞ்சல் ananthprasath@drcet.org.

கல்விச் சேவை பற்றி அறிய மற்றும் எங்களது இந்த கல்விச் சேவைக்கு உதவி ஏழை குழந்தைகளின் கல்வி தரத்தை உயர்த்திட - DRCET

எமது நிறுவனம் மற்றும் தொழில் பற்றி அறிய - Web Designing Company


Wednesday, September 15, 2010

தோல்வியே வெற்றியின் படிக்கட்டுகள்

16 செப்டம்பர் 2010

தோல்வியே வெற்றியின் படிக்கட்டுகள்

ஸ்காட்லாந்து மன்னர் புரூஸ் தனது அரண்மனையில் உட்கார்ந்திருந்தார். நாட்டை இழந்தசோகம் அவர் முகத்தில் வலை பின்னியிருந்தது. ஏன்…? தோல்வி… தோல்வி… எல்லாப் போரிலும் அவருக்குத் தோல்விக்கு மேல் தோல்வி? மேலும் மேலும் முயன்று தோல்வி என்பதால் போர் முயற்சியைக் கைவிடலாமா என்று கவலையுடன் யோசித்தார். கன்னத்தில் கை வைத்த படியே மோட்டு வளையைப் பார்த்துக் கொண்டிருந்த மன்னருக்கு அங்கே ஒரு ஆச்சரியமான காட்சி காத்திருந்தது.

வீட்டு மேல் கூரையில் ஒரு சிலந்தி தனது எச்சிலை நூலாக்கி வலை பின்னிக் கொண்டிருந்தது. மிகமிக மெல்லிய நூல் இழை. அதில் தொங்கிக் கொண்டே தன் கால்களை அப்படியும் இப்படியும் அசைத்து அசைத்துத் தனது குடியிருப்பை… வலைப்பின்னலை உருவாக்கிக் கொண்டிருந்தது. சிலந்தி வலை அறுந்து அறுந்து போனாலும் கொஞ்சம் கூடக் கவலைப்படாமல், ஓய்ந்து விடாமல் பாய்ந்து பாய்ந்து வலை பின்னியது சிலந்தி. தோல்வி அந்தச் சிலந்தியைப் பாதிக்கவே இல்லை.

மன்னருக்குப் பொறி தட்டியது. இத்தனை தோல்விக்குப் பிறகும் தளராமல் சிலந்தி செயல்படும் போது, காரிய சாதனை செய்யும் போது நாம் இப்படித் தளர்ந்து போகலாமா என்று தன் உணர்வு பெற்றார். சிலந்தியின் முயற்சி அவரைச் சிந்திக்க வைத்தது! நாட்டை மீட்டு மீண்டும் அரியணை நாற்காலியில் ஏற வைத்தது! முடியாது என்று சிலந்தி கூட ஒதுங்குவது இல்லை. முதுகெலும்புடைய மனிதன் நாம் ஒதுங்கலாமா? நம்மாம் முடியும்? முதலில் தோல்விகளையே சந்திக்க கூடும். பிறகு சிலந்தியைய் போல நாமும் நம் வாழ்வில் வெற்றி பெற முடியும்.

இந்த முயற்சியனை திருவள்ளுவர் இவ்வாறு அழகாக கூறுகிறார்:

அருமை உடைத்தென்று அசவாமை வேண்டும்

பெருமை முயற்சி தரும்.

குறள் விளக்கம்: நம்மால் முடியுமா என்று மனத்தளர்ச்சி அடையாமல், முடியும் என்ற நம்பிக்கையுடன் முயற்சி செய்தால் அதுவே பெரிய வலிமையாக அமையும்.

குறிப்பு: தங்களது நண்பர்கள், உறவினர்கள், குடும்பத்தினர்கள், சகஊழியர்கள் என எவரேனும் இந்தச் சேவையை பெற விரும்பினால் தயவு செய்து அவர்களது மின்னஞ்சலை எமக்கு தெரியப்படுத்தவும். தெரியப்படுத்த வேண்டிய மின்னஞ்சல் ananthprasath@drcet.org.

கல்விச் சேவை பற்றி அறிய மற்றும் எங்களது இந்த கல்விச் சேவைக்கு உதவி ஏழை குழந்தைகளின் கல்வி தரத்தை உயர்த்திட - DRCET

எமது நிறுவனம் மற்றும் தொழில் பற்றி அறிய – Web Designing Company

Tuesday, September 14, 2010

வெற்றி

15 செப்டம்பர் 2010

வெற்றி

“நாம் அறிவாளியாவது என்பது வேறு. பிறரை முட்டாளாக்குவது என்பது வேறு”. இரண்டும் ஒன்றாகி விட முடியுமா? நீங்கள் எத்தனைபேரை வேண்டுமானாலும் சுலபமாக முட்டாளாக்கிவிட முடியும். ஆனால் நீங்கள் அறிவாளி ஆவது சுலபமான காரியம் இல்லை. முயற்சி, திறமை இப்படி எவ்வளவோ அதற்குத் தேவை.

இதற்கு சொல்வேந்தர். சுகிசிவம் கூறும் உதாரணம். பள்ளிக்கூடத்தில் படிக்கும் பத்து வயதுப் பெண் தனது முப்பத்துஐந்து வயது அப்பாவிடம் வந்து நின்றாள். விழிகளை அகல விரித்தபடி அப்பாவிடம் ஒரு புதிர் போட்டாள். “அப்பா.. ஒரு குட்டிக் குரங்கு… தனியா மரத்துல உட்கார்ந்து இருக்கு… அந்த மரத்துக்குக் கீழே திடீர்னு வெள்ளம் வந்துடுச்சு… காட்டாத்து வெள்ளம்… திரும்பின பக்கம் எல்லாம் ஓடுது… அந்தக் குட்டிக் குரங்குக்கு நீந்தத் தெரியாது.. பயங்கர வெள்ளம் கீழே… அது எப்படித் தப்பிக்கும் சொல்லுங்கள்?” என்று அப்பாவை அசர வைத்தாள் மகள்.

அரைமணி நேரம் மாறி மாறி யோசித்த அப்பா முடிவில் தன் தோல்வியை ஒப்புக் கொண்டார். “அந்தக் குட்டிக் குரங்கு எப்படித் தப்பிக்கும் … தெரியலை, நீயே சொல்லு” என்றார் மகளிடம். “ஆம்… இவ்வளவு பெரிய குரங்கு உனக்கே தெரியலை… அந்தக் குட்டிக் குரங்குக்கு மட்டும் எப்படி தெரியும்?” என்று கையை அப்பா முகத்துக்கு நேரே ஆட்டிவிட்டுச் சிட்டாய்ப் பறந்தாள்.

அந்தச் சின்னப் பெண். அவளிடத்திலும் கேள்விக்கு விடையில்லை; ஆனால் அப்பாவைக் குரங்கு என்று கேலி செய்ய, முட்டாளாக்க அரை மணி நேரம் செலவிட்டாள் அந்தச் சின்னப் பெண். இன்றைக்கு இந்தச் சின்னத்தனம் தான் எங்கும் நடக்கிறது.

பிறரை வாய் மூடச் செய்வது, செயலிழக்கச் செய்வது, தோற்றுப் போகச் செய்வது, ஆளவிடாமல் தடுப்பது, முன்னேற முடியாதபடி முதுகை முறிப்பது… இப்படிப் பிறரைத் தோற்கடிப்பதைத் தம்முடைய வெற்றியாகக் கருதுகிறோம். இந்தத் தவறுதலான எண்ணத்திலிருந்து தயவு செய்து வெளியே வரவேண்டும். பிறரைத் தோற்கடிப்பது லட்சியமல்ல… நமது வெற்றியே நமது குறிக்கோள் என்கிற தெளிவு இருக்க வேண்டும்.

நாம் வெற்றி பெற்றால் நமக்கு எதிரிகள் இருக்க மாட்டார்கள். பிறரைத் தோற்கடித்தால் நாம் ஒரு நிரந்தர எதிரியை ஏற்படுத்திக் கொள்கிறோம். நாம் யாரைத் தோற்கடித்தாலும் அவர் நம்மைத் தோற்கடிக்கவே தமது எஞ்சிய காலம் முழுவதையும் செலவிடுகிறார்.

“நாம் வெற்றி பெறுவது வேறு, பிறரைத் தோற்கடிப்பது வேறு, பிறரைத் தோற்கடிப்பதே வெற்றி என்று தவறுதலாக அர்த்தம் கொள்ள வேண்டாம்”.

குறிப்பு: தங்களது நண்பர்கள், உறவினர்கள், குடும்பத்தினர்கள், சகஊழியர்கள் என எவரேனும் இந்தச் சேவையை பெற விரும்பினால் தயவு செய்து அவர்களது மின்னஞ்சலை எமக்கு தெரியப்படுத்தவும். தெரியப்படுத்த வேண்டிய மின்னஞ்சல் ananthprasath@drcet.org.

கல்விச் சேவை பற்றி அறிய மற்றும் எங்களது இந்த கல்விச் சேவைக்கு உதவி ஏழை குழந்தைகளின் கல்வி தரத்தை உயர்த்திட - DRCET

எமது நிறுவனம் மற்றும் தொழில் பற்றி அறிய - Web Designing Company


Monday, September 13, 2010

உதவி

14 செப்டம்பர் 2010

உதவி

ஒரு முறை மகாத்மா காந்தி ரயிலில் ஏறியபோது அவரது ஒரு செருப்பு நழுவி வெளியே விழுந்துவிட்டது. ரயில் நகரத் தொடங்கிவிட்டதால் அவரால் அதை எடுக்கமுடியவில்லை. மற்ற பயணிகள் வியப்போடு பார்க்க, காந்தி அமைதியாகத் தனது இன்னொரு செருப்பை கழற்றினார். முதலில் நழுவி விழுந்த செருப்பு கிடந்த தண்டவாளத்தின் அருகில் இந்தச் செருப்பை வீசியெறிந்தார்.

ஏன் அப்படிச் செய்தீர்கள் என்று மற்றவர்கள் கேட்க காந்தி நிதானமாகச் சொன்னார், “ஒரு செருப்பைக் கண்டுபிடிக்கும் யாரோ ஓர் ஏழை மனிதனுக்கு, ஒரு ஜோடியாக இருந்தால் உதவுமே!”.

குறிப்பு: தங்களது நண்பர்கள், உறவினர்கள், குடும்பத்தினர்கள், சகஊழியர்கள் என எவரேனும் இந்தச் சேவையை பெற விரும்பினால் தயவு செய்து அவர்களது மின்னஞ்சலை எமக்கு தெரியப்படுத்தவும். தெரியப்படுத்த வேண்டிய மின்னஞ்சல் ananthprasath@drcet.org.

கல்விச் சேவை பற்றி அறிய மற்றும் எங்களது இந்த கல்விச் சேவைக்கு உதவி ஏழை குழந்தைகளின் கல்வி தரத்தை உயர்த்திட - DRCET

எமது நிறுவனம் மற்றும் தொழில் பற்றி அறிய - Web Designing Company

புதுமை படைத்தல்

13 செப்டம்பர் 2010

புதுமை படைத்தல்

புதுமை என்றாலே புது விஷயங்கள் என்றுதான் பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். தவறு! புதுமை என்றால் முதலில் ஓர் அவா, தாகம். அடுத்தது மனிதர்கள். மூன்றாவது புதிய சிந்தனை. உலகத்தின் மிகச் சிறந்த புதிய சிந்தனைகள் தோற்றுப் போயிருக்கின்றன. ஏனென்றால் மனிதர்கள் அவற்றை முழுமனதாக ஏற்கவில்லை; அவர்கள் மனதில் ஆவல் பொங்கவில்லை.

புதுமைகள் புரட்சிகளாக மாறுவதற்கு, நம்மை முற்றிலும் புதிய தளத்துக்கு அழைத்துச் செல்வதற்கு, பேரவா கொண்ட மனிதர்கள் அவசியம் தேவை. ஸ்டீவ் ஜாப்ஸ் ஒரு புதிய சிந்தனையை வைத்துக் கொண்டு மக்கின்டாஷ் கணிப்பொறியை உருவாக்கவில்லை. தன் அணியைக் கூப்பிட்டு, ஒரு ‘வெறித்தனமான, மகத்தான கணிப்பொறியை’ உருவாக்கச் சொன்னார். கணிப்பொறி உலகத்தையே கவிழ்க்கப் போகிற ஒரு கணிப்பொறியை உருவாக்குவது அவர் நோக்கம்.

டேவிட் ஆகில்வி, வரலாறு படைத்த விளம்பரங்களைத் தயாரித்தவர். அவரும் புதிய சிந்தனையை பிடித்துக் கொண்டு வந்து யார் கையிலும் கொடுக்கவில்லை. தன் அணியைக் கூப்பிட்டார். ‘அழிவில்லாத சிரஞ்சீவியான படைப்புகள் எவற்றையாவது உருவாக்குங்கள்’ என்று மட்டுமே சொன்னார்.

புதுமை படைப்பதற்கான வழிகள்:

· மனிதர்களை ஊக்கப்டுத்துவது, சக்தியை வெளியே கொண்டுவருவது, அதிகாரம் கொடுப்பது என்றெல்லாம் பேசுகிறோம். இதற்கு நிறைய நேரமும் சக்தியும் செலவிடுகிறோம். ஆனால் ‘ஊக்கம் கொடுப்பது’ என்பதை வெளியிலிருந்து செய்ய முடியாது. மனிதர்களுக்குள் ஏற்கனவே உறைந்து கிடக்கும் ஆர்வத்தில் நெருப்பு பற்ற வைப்பதே ஒரே வழி.

· அதிகார அமைப்புகள், ஒரு நிறுவனம் நிலைபெற உதவும். ஆனால் அதே அமைப்புகள் நாம் போகும் பாதையையே கூடக்கட்டுப்டுத்தலாம். இந்த அமைப்புகளை மாற்றுவது என்றால் நிறுவனம் ஏன் அந்தத் தொழில்துறையே – இயங்கும் விதத்தை மாற்றவேண்டியிருக்கும்.

· மனிதர்கள் கூட்டமாகச் சேர்ந்து கனவு காணும்போது தொழில்துறைகளே மாற்றம் அடைகின்றன. நீங்கள் உங்கள் அணியுடன் சேர்ந்து கனவு காண்கிறீர்களா, அல்லது உங்கள் தனிப்பட்ட கனவுகளை கீழே இருப்பவர்களிடம் தெரிவித்து அவற்றை நிறைவேற்றச் சொல்கிறீர்களா?

புதுமையாளர்கள் கனவுக் கூட்டங்களை நடத்தி, அணியில் உள்ளவர்களையும் பயணத்தில் முழுவதும் ஈடுபடுத்திக்கொள்கிறார்கள். செய்யமுடியாத சாதனைகளைச் செய்யத் தூண்டுதல் தருகிறார்கள்.

புதுமையாளர்கள் புதுமைகளைச் செய்வதில்லை. தாங்கள் செய்வதையே புதுமையாக்குகிறார்கள்.


கல்விச் சேவை பற்றி அறிய மற்றும் எங்களது இந்த கல்விச் சேவைக்கு உதவி ஏழை குழந்தைகளின் கல்வி தரத்தை உயர்த்திட - DRCET

எமது நிறுவனம் மற்றும் தொழில் பற்றி அறிய - Web Designing Company

Thursday, September 9, 2010

சிந்தனைகள்

10 செப்டம்பர் 2010

சிந்தனைகள்

· உங்களுக்கு எதிரி இருக்கிறானா? அவனைப் பார்த்து சிரியுங்கள். அவனைச் செயல் இழக்கச் செய்வதற்கு இதை விடப் பெரிய ஆயுதம் வேறு எதுவும் தேவையில்லை.

· ஒரு அவமானம் உங்கள் மீது வீசப்படுமானால் அதைப் பார்த்து சிரியுங்கள். அப்படி நீங்கள் சிரிக்காவிட்டால், அந்த அவமானத்தை ஏற்கத் தகுதியானவர் நீங்கள் என்று ஆகிவிடும்.

· எந்த ஒரு விஷயத்திலும் ஆழமான கவனத்தைச் செலுத்தும் போதுதான் வெற்றி உத்திரவாதமாகிறது.

· பிரச்சனைகளைத் தீர்க்கின்றவர்களுக்கு மட்டுமே வாழ்க்கை, புகழையும் செல்வத்தையும் கொடுக்கிறது.

· பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு நீங்கள் தெரிந்துகொள்ளுகின்ற போது, அதற்கான துணிச்சலை நீங்கள் பெறுகின்ற போது, வாழ்க்கையில் உங்கள் மதிப்பையும் நீங்கள் உயர்த்திக் கொள்ள முடியும்.

குறிப்பு: தங்களது நண்பர்கள், உறவினர்கள், குடும்பத்தினர்கள், சகஊழியர்கள் என எவரேனும் இந்தச் சேவையை பெற விரும்பினால் தயவு செய்து அவர்களது மின்னஞ்சலை எமக்கு தெரியப்படுத்தவும். தெரியப்படுத்த வேண்டிய மின்னஞ்சல் ananthprasath@drcet.org | Subscribe | Unsubscribe.

கல்வி உதவித்தொகை வழங்கும் விழா: நமது டாக்டர் இராதகிருஷ்ணன் கல்வி அறக்கட்டளையின் இந்த வருடத்திற்கான உதவித் தொகை வழங்கும் விழா அடுத்த மாதம் நடைபெற உள்ளது. இந்த கல்வி உதவித்தொகை வழங்கும் விழாவிற்கு உதவி ஏழைக் குழந்தைகளின் கல்வி தரத்தை உயர்திட விரும்பினால் எம்மைத் தொடர்பு கொள்ளவும். தொடர்பு கொள்ள வேண்டிய அலைபேசி எண் - +91-97380 10000.

கல்விச் சேவை பற்றி அறிய மற்றும் எங்களது இந்த கல்விச் சேவைக்கு உதவி ஏழை குழந்தைகளின் கல்வி தரத்தை உயர்த்திட - DRCET

எமது நிறுவனம் மற்றும் தொழில் பற்றி அறிய - Web Designing Company

Wednesday, September 8, 2010

விமர்சிக்கும் உலகம் இது

9 செப்டம்பர் 2010

விமர்சிக்கும் உலகம் இது

பட்டினத்தார் எத்தனை பெரிய துறவி? கோடிக்கணக்கான சொத்தை அப்படியே விட்டுவிட்டுக் கோவணத்துடன் வெளியேறிய கடுந்துறவி. சோற்றாசை கூட இல்லாத சந்யாஸி. கையில் ஓடு வைத்திருந்த பத்திரிகிரியாரைத் சொத்து வைத்திருக்கும் குடும்பஸ்தன் என்று கிண்டலடித்த அப்பழுக்கற்ற துறவி. அவரையே உலகம் என்ன பாடுபடுத்தியது தெரியுமா?

நடந்த களைப்பால் வயலில் படுத்திருந்தார் பட்டினத்தார். அறுவடை நடந்திருந்த வயல் அது. குச்சி குச்சியாய்ப் பூமியில் இருந்து கிளம்பி அறுபடாதிருந்த வைக்கோல் அவர் உடம்பில் குத்திக் கொண்டிருந்தது. அதைச் சட்டை செய்யாமல் (சட்டை இல்லாமல்) படுத்துக் கிடந்தார். இருக்கும் போதே இறந்து போன மாதிரி இருந்தார்.

அந்த வழியாகப் போன இரண்டு பெண்கள் வரப்பு வழியாக நடந்து போக முடியாதபடி பட்டினத்தார் வரப்பு மீது தலைவைத்துப் படுத்திருந்தார். ஒரு பெண்மணி, “யாரோ மகானா!” என்று அவரை வணங்கி வரப்பிலிருந்து இறங்கி நடந்தார். மற்றொரு பெண்மணியோ, “ஆமாம்… ஆமாம்… இவரு பெரிய சாமியாராக்கும்… தலையணை வைச்சுத் தூங்கறான் பாரு… ஆசை பிடிச்சவன்” என்று கடுஞ்சொல் வீசினார். அவர்கள் அங்கிருந்து போனதும் எழுந்து உட்கார்ந்த பட்டினத்தார், “ஆஹா… நமக்கு இந்த அறிவு இது நாள் வரை இல்லையே” என்று வருந்தி வரப்பிலிருந்து தலையைக் கீழே வைத்துப் படுத்தார்.

சற்று நேரத்தில் அந்த இரண்டு பெண்களும் அதே வழியாகத் திரும்பி வந்தனர். வரப்பிலிருந்து தலையை இறக்கிக் கீழே வைத்திருந்த பட்டினத்தாரைப் பார்த்து முதல் பெண் பரிதாபப்பட்டு, “பார்த்தாயா… நீ சொன்னதைக் கேட்டு உடனே கீழே இறங்கிப் படுத்துட்டாரூ… இப்பவாவது ஒத்துக்கோ… இவரு மகான்தானே…! என்றார். அந்த பெண்மணியோ, தனக்கே உரித்த பாணியில் “அடி போடி… இவனெல்லாம் ஒரு சாமியாரா? தன்னைப் பத்தி யார் யாரு என்ன என்ன பேசுறாங்கன்னு ஒட்டுக் கேட்கிறான்… அதைப் பத்திக் கவலைப்படறான். இவனெல்லாம் ஒரு சாமியாரா?” என்று ஒரு வெட்டு வெட்டினாள். பட்டினத்தாருக்குத் தலை சுற்றியது.

எப்படி இருந்தாலும் உலகம் நம்மை விமர்சிக்கும். இது பேருண்மை. தரமானவர்களின் தரமான விமர்சனத்தை மதிக்க வேண்டும். விமர்சிக்க வேண்டும் என்கிற வெறியுடன் விமர்சிக்கிறவர்கள் விமர்சனத்தைப் புறக்கணியுங்கள்!!!

குறிப்பு: தங்களது நண்பர்கள், உறவினர்கள், குடும்பத்தினர்கள், சகஊழியர்கள் என எவரேனும் இந்தச் சேவையை பெற விரும்பினால் தயவு செய்து அவர்களது மின்னஞ்சலை எமக்கு தெரியப்படுத்தவும். தெரியப்படுத்த வேண்டிய மின்னஞ்சல் ananthprasath@drcet.org | Subscribe | Unsubscribe.

கல்வி உதவித்தொகை வழங்கும் விழா: நமது டாக்டர் இராதகிருஷ்ணன் கல்வி அறக்கட்டளையின் இந்த வருடத்திற்கான உதவித் தொகை வழங்கும் விழா அடுத்த மாதம் நடைபெற உள்ளது. இந்த கல்வி உதவித்தொகை வழங்கும் விழாவிற்கு உதவி ஏழைக் குழந்தைகளின் கல்வி தரத்தை உயர்திட விரும்பினால் எம்மைத் தொடர்பு கொள்ளவும். தொடர்பு கொள்ள வேண்டிய அலைபேசி எண் - +91-97380 10000.

கல்விச் சேவை பற்றி அறிய மற்றும் எங்களது இந்த கல்விச் சேவைக்கு உதவி ஏழை குழந்தைகளின் கல்வி தரத்தை உயர்த்திட - DRCET

எமது நிறுவனம் மற்றும் தொழில் பற்றி அறிய - Web Designing Company

Tuesday, September 7, 2010

பணம்

8 செப்டம்பர் 2010

பணம்

பணம் பற்றி உலக அறிஞர்கள் கூறுவது:

  • ஹென்றிக் இப்சன்
    • பணத்தால் உணவை வாங்கலாம்; ஆனால் பசியை வாங்க முடியாது.
    • பணத்தால் தொடர்புகளைப் பெறலாம்; ஆனால் நண்பர்களைப் பெற முடியாது.
    • பணத்தால் வேலையாட்களைப் பெறலாம்; ஆனால் விசுவாசத்தைப் பெற முடியாது.
    • பணத்தால் பலநாள் சந்தோஷத்தைப் பெறலாம்; ஆனால் அமைதியை, இன்பத்தை பெற முடியாது.
  • ஆண்ட்ரோ மாராயிஸ் – பணத்தையோ வெற்றியையோ பேராசையோடு தேடுவதால் துக்கம்தான் ஏற்படும். ஏனெனில் அப்படிப்பட்ட வாழ்க்கை தங்களுக்கு வெளியே உள்ளவற்றைச் சார்ந்திருக்கச் செய்கிறது.
  • எட்வர்ட் பாக் – மனிதனால் உணவை உண்டு மட்டுமே வாழ்ந்துவிட முடியாது. பணத்தைச் சம்பாதிப்பது, அதன் மூலம் அதிகாரத்தைச் சேர்ப்பதால் வாழ்விற்கு பயனில்லை. வாழ்வு இவற்றை விட மேலானது. இந்த உண்மையை அறியாதவற்கள், அடுத்தவா்களுக்கு சேவை புரிவதால் கிடைக்கும் மாபெரும் சந்தோஷம், திருப்த்தியை அடையமாட்டார்கள்.
  • ஜார்ஜ் ஹோரேஸ் லாரிபர் – பணத்தையும் பணத்தால் வாங்கக்கூடிய பொருட்களையும் பெற்றிருப்பது நல்லதுதான். ஆனால் அவ்வப்போது பரிசோதித்துப் பார்த்து பணத்தால் பெற முடியாதவற்றை நீங்கள் இழந்துவிடவில்லை என்று நிச்சயம் செய்து கொள்வதும் நலமே!!!

குறிப்பு: தங்களது நண்பர்கள், உறவினர்கள், குடும்பத்தினர்கள், சகஊழியர்கள் என எவரேனும் இந்தச் சேவையை பெற விரும்பினால் தயவு செய்து அவர்களது மின்னஞ்சலை எமக்கு தெரியப்படுத்தவும். தெரியப்படுத்த வேண்டிய மின்னஞ்சல் ananthprasath@drcet.org.

கல்வி உதவித்தொகை வழங்கும் விழா: நமது டாக்டர் இராதகிருஷ்ணன் கல்வி அறக்கட்டளையின் இந்த வருடத்திற்கான உதவித் தொகை வழங்கும் விழா அடுத்த மாதம் நடைபெற உள்ளது. இந்த கல்வி உதவித்தொகை வழங்கும் விழாவிற்கு உதவி ஏழைக் குழந்தைகளின் கல்வி தரத்தை உயர்திட விரும்பினால் எம்மைத் தொடர்பு கொள்ளவும். தொடர்பு கொள்ள வேண்டிய அலைபேசி எண் - +91-97380 10000.

கல்விச் சேவை பற்றி அறிய மற்றும் எங்களது இந்த கல்விச் சேவைக்கு உதவி ஏழை குழந்தைகளின் கல்வி தரத்தை உயர்த்திட - DRCET

எமது நிறுவனம் மற்றும் தொழில் பற்றி அறிய - Web Designing Company

Monday, September 6, 2010

மன ஒருமைப்பாடு

7 செப்டம்பர் 2010

மன ஒருமைப்பாடு

மனதை ஒரு முகப்படுத்த கற்றவன் ‘மகான்’ ஆவான். இதனை சுவாமி விவேகானந்தர் இவ்வாறு கூறுகிறார்.

  • கல்வியின் அடிப்படையான இலட்சியமே மனதை ஒருமுகப்படுத்துவதுதான். மனதை ஒரு முகப்படுத்துகிற அளவுக்கு அறிவு வளர்ச்சியும் அதிகமாகும்.
  • நான் மறுபடியும் கல்வி கற்பதாக இருந்தால் வெறும் புள்ளி விவரங்களை படிக்கமாட்டேன். முதலில் மனத்தை ஒரு முகப்படுத்தும் ஆற்றலையம், நல்ல பண்பாட்டையும் வளர்த்துக் கொள்வேன். அதன் பிறகு பண்படுத்தப்பட்ட அந்தக் கருவியைக் கொண்டு நினைத்த நேரத்தில் உண்மைகளை சேகரித்துக் கொள்வேன்.

மனஒருமைப்பாடு பற்றி உலக வரலாறு கூறுவது:

  • ஆங்கிலக் கவிஞர் ஷெல்லி இவ்வாறு கூறுகிறார் – ஒரு நாள் நள்ளிரவு நேரம். அழகிய மனைவி. இளம் வயதினாள். அவள் தூங்கவில்லை. கவிஞனும் தூங்கவில்லை. எழுதுகோல் அவன் கையில் இருக்கிறது. அவன் பார்வை எங்கோ எட்டாத தொலைவில் எதையோ துழாவிக் கொண்டிருக்கிறது. படுத்துக் கொண்டு இருக்கும் மனைவியின் கண்களோ கணவன் எப்போது எழுந்து வருவார் என்று ஏங்குகின்றன.

அவன் எழுதுகிறான். இவளோ ஏங்குகிறாள். எழுந்து அவனை நெருங்கிச் செல்வதற்கு அடியெடுத்து வைத்தாள். மெதுவாக, மிக மெதுவாகத்தான் அவள் வந்தாள். ஆனாலும் கவிஞன் சொன்னான்…‘பெண்ணே? மெதுவாக நட – என் கனவுகளைக் கலைக்காதே என்று…’. ஆம், நுண்ணிய மென் பொருளைத் தேடி பயணம் போகும் கவிஞனின் இதயம் மனைவியின் பூப்பாதம் எழுப்பும் மெத்தென்ற ஒலியையும் சகிக்க மறுக்கிறது.

  • வில் வித்தையில் வித்தகர் அர்ச்சுனனின் மன ஒருமைப்பாடு. மரத்தின் உச்சியிலிருக்கும் பறவையை ஒரே அம்பில் வீழ்த்த வேண்டும் என்பது போட்டியின் நிபந்தனை. வில் வளைந்து நாணேற்றிக் குறி பார்த்த அர்ச்சுனனுக்குப் பறவையின் கழுத்து மட்டுமே தெரிந்தது. விட்டார் அம்மை, விழுந்தது பறவை. வில்வித்தையில் வெற்றி வீரனானான். கழுத்து மட்டுமே எப்படித் தெரிந்தது? மற்ற சிந்தனைகள் எதுவும் அவன் உள்ளத்தில் புகவில்லை – புகுமாறு விடவில்லை. எனவே அவன் கண்கள் பார்க்க வேண்டியதை மட்டுமே பார்த்தன. ஆனால், அர்ச்சுனனைத் தவிர மற்றவர்களது கண்களோ மரத்தின் கிளைகளையும் இலைகளையும் அவற்றோடு பறவையையும் பார்த்தன.
  • நெப்போலியன் மன ஒருமைப்பாடு – நெப்போலியன் தனது உள்ளத்தைப் பல அறைகள் கொண்ட ஒரு கூண்டிற்கு ஒப்பிடுகிறார். ஓர் அறையினைத் திறந்து வைத்திருக்கும் போது, அதாவது ஒரு பொருளைப் பற்றிச் சிந்திக்கும் போது மற்ற எல்ல அறைகளையும் அடைத்து வைத்து விடுவாராம்.

கல்வி உதவித்தொகை வழங்கும் விழா: நமது டாக்டர் இராதகிருஷ்ணன் கல்வி அறக்கட்டளையின் இந்த வருடத்திற்கான உதவித் தொகை வழங்கும் விழா அடுத்த மாதம் நடைபெற உள்ளது. இந்த கல்வி உதவித்தொகை வழங்கும் விழாவிற்கு உதவி ஏழைக் குழந்தைகளின் கல்வி தரத்தை உயர்திட விரும்பினால் எம்மைத் தொடர்பு கொள்ளவும். தொடர்பு கொள்ள வேண்டிய அலைபேசி எண் - +91-97380 10000.

கல்விச் சேவை பற்றி அறிய மற்றும் எங்களது இந்த கல்விச் சேவைக்கு உதவி ஏழை குழந்தைகளின் கல்வி தரத்தை உயர்த்திட - DRCET

எமது நிறுவனம் மற்றும் தொழில் பற்றி அறிய - Web Designing Company

Sunday, September 5, 2010

இல்லற இன்பம்

இல்லற இன்பம்

ஒரு முறை கபீர்தாசரிடம் அவருடைய பக்தர் அறிவுரை கேட்க வந்திருந்தார். அவர் தயங்கித் தயங்கி கபீர்தாசரிடம், “எனக்கு இல்லற வாழ்க்கை இன்பமாக இல்லை! என்னுடைய மனைவியும் நானும் இன்பமாக குடும்பம் நடத்தவில்லை! எப்பொழுதும் சண்டைதான்! நான் என்ன சொன்னாலும் அவள் கேட்பதில்லை! எதிர்த்துப் பேசறா… எரிஞ்சு விழறா… கோபப்படறா… எனக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை என்றார்”.

கபீர்தாசர் பார்த்தார். “சரி இன்னும் கொஞ்ச நேரம் இங்கேயே இருங்கள்?”, யோசனை செய்து பதில் சொல்கிறேன்! என்று சொல்லிவிட்டு, ஒரு பெரிய நூல் கண்டை எடுத்து கொண்டுவந்து வீட்டிற்கு வெளியே வெளிச்சத்தில் உட்கார்ந்தார். அந்த பெரிய நூல்கண்டு சிக்கலாயிருந்தது. அதனாலே கபீர்தாசர் அதில் உள்ள சிக்கல்களை ஒவ்வொன்றாக பிரித்தெடுத்தார். நல்ல வெளிச்சமாகத்தான் இருந்தது. மனைவியிடம் விளக்கை எடுத்துக் கொண்டுவா என்றார். அந்த அம்மாவும் ஒரு விளக்கை எடுத்துக் கொண்டுவந்து அவர் பக்கத்திலே வைத்துவிட்டு உள்ளே போய்விட்டார்கள். “இவ்வளவு வெளிச்சத்தில் விளக்கு எதற்கு என்று எதுவும் கேட்கவில்லை”.

சிறிது நேரம் கழித்து அந்த அம்மா இரண்டு டம்ளர் பாலைக் கொண்டுவந்து அவர்கள் முன்னால் வைத்தார்கள். இரண்டு பேரும் அதை எடுத்துக் குடிக்க ஆரம்பித்தார்கள். வந்திருந்தவரின் முகம் சுருங்க ஆரம்பித்தது… பாலை அவரால் குடிக்க முடியவில்லை. ஏனெனில், அந்த அம்மா பாலில் சர்க்கரைக்குப் பதிலாக, உப்பைப் போட்டு இருந்தார்கள். வந்தவர், சரின்னு கபீர்தாசர் முகத்தைக் கவனித்தார். அவர் முகத்திலே எந்த வித்தியாசமும் இல்லை. அவர் அதை அப்படியே குடித்துவிட்டார். அந்த அம்மா, “பாலுக்குச் சர்க்கரை போதுமா?” என்று கேட்கிறார்கள்! அதற்கு கபீர்தாசர், “போதும்! இனிப்புச் சரியாக இருக்கு!” என்கிறார்.

இதையெல்லாம் பார்த்துக் கொண்டு எதிரில் இருந்தவர், “இன்னும் என்னுடைய கேள்விக்கு பதில் சொல்லவில்லையே!” என்று கபீர்தாசரைப் பார்த்து விளவினார். அதற்கு கபீர்தாசர், “நான் இப்பொழுது என் மனைவிக்கு என்ன பதில் சொன்னனோ அதுதான் உங்கள் கேள்விக்கும் பதில் என்றார்”. யஜீர் வேதம் என்ன சொல்கிறது தெரியுமா? “எந்தக் குடும்பத்திலே கணவனும் மனைவியும் ஒருத்தர் குற்றத்தை இன்னொருத்தர் பார்க்காமல் இருக்கிறார்களோ அந்தக் குடும்பம் பூலோக கைலாசம்” என்றார்.

இதிலிருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால், கபீர் வெளிச்சத்தில் உட்கார்ந்து கொண்டு விளக்கை கேட்டபோது, அவர் மனைவி ஏதும் கேட்காமல் விளக்கை கொண்டு வந்து வைத்தார். கபீரின் மனைவி பாலில் சர்க்கரைக்குப் பதிலாக உப்பை போட்டிருந்த போது, கபீர் ஏதும் கூறாமல் அதைக் குடித்தார். இதுவே இல்லற இன்பம்.

கபிலர்… நானும் என் மனைவியும் குடும்பத்திலே ஒருவரை ஒருவர் ரொம்ப “விட்டுக் கொடுத்து” நடந்து கொள்வோம். அதனால் எங்களுக்குள் மனஸ்தாபம் வருவதே இல்லை.

“இதுவே இல்லறம் இன்பம்”

குறிப்பு: தங்களது நண்பர்கள், உறவினர்கள், குடும்பத்தினர்கள், சகஊழியர்கள் என எவரேனும் இந்தச் சேவையை பெற விரும்பினால் தயவு செய்து அவர்களது மின்னஞ்சலை எமக்கு தெரியப்படுத்தவும். தெரியப்படுத்த வேண்டிய மின்னஞ்சல் ananthprasath@drcet.org.

கல்வி உதவித்தொகை வழங்கும் விழா: நமது டாக்டர் இராதகிருஷ்ணன் கல்வி அறக்கட்டளையின் இந்த வருடத்திற்கான உதவித் தொகை வழங்கும் விழா அடுத்த மாதம் நடைபெற உள்ளது. இந்த கல்வி உதவித்தொகை வழங்கும் விழாவிற்கு உதவி ஏழைக் குழந்தைகளின் கல்வி தரத்தை உயர்திட விரும்பினால் எம்மைத் தொடர்பு கொள்ளவும். தொடர்பு கொள்ள வேண்டிய அலைபேசி எண் - +91-97380 10000.

கல்விச் சேவை பற்றி அறிய மற்றும் எங்களது இந்த கல்விச் சேவைக்கு உதவி ஏழை குழந்தைகளின் கல்வி தரத்தை உயர்த்திட - DRCET

எமது நிறுவனம் மற்றும் தொழில் பற்றி அறிய - Web Designing Company