Wednesday, April 15, 2009

இலக்கு

வாழ்வில் நமக்கு இலக்கு தேவைதான். இலக்கு நோக்கியே இயக்கம் என்றாகும் போது ‘எதை நோக்கி ஏன் போகிறோம்’ என்று புரியாமல் இயந்திரங்களாகி விடுகிறோம். சிலர் இலக்குகளை மீறி இலக்குகளை நினைத்து தன்னில் வெறியேற்றிக் கொள்கிறார்கள். அப்போது ஆசை, அச்சம் என்று பலப்பல மேகங்களை மீறி உண்மையின் ஒளி வெளிவரும். அதன் தெளிவில் பாதையும் தெரியும்; பயணமும் புரியும்; வாழ்க்கையும் அமைதி அடையும். ஒரு முழுமையான வாழ்வான இதனை அடைய மனதினை முழுமையாக நம் வசமாக்கிக் கொள்ள வேண்டும்.

ஆனால் நம் மனதும் இலக்கும் ஒன்றாக இருப்பதில்லை. உதாரணமாக, காதலிக்காக காத்திருக்கும் போது கூட மனம் அங்கிருக்கும் பெண்களின் மீது தாவுகிறது. முழுமையாக முடிவு செய்து ஒரு புத்தகம் வாங்குவதற்காக புத்தகசாலைக்கு சென்றால் கூட மனம் அங்குள்ள மற்ற புத்தகங்களின் மீது தாவுகிறது. மனம் எப்பொழுதும் கூடு விட்டு கூடு பாய்ந்து கொண்டே இருக்கிறது. அப்படிப்பட்ட மனதை ஒரு இலக்கில் நிறுத்துவது என்பது பற்றி இந்த மகாபாரத கதை அழகாக விளக்குகிறது.

துரோணனின் மாணவர்கள் அனைவரும் வில் வித்தையில் சிறந்தவர்கள். இலக்குகளை நோக்கி அம்புகளைத் தவறாமல் செலுத்தக் கூடியவர்கள். ஒரு பறவையை அடிக்க துரோணர் சொன்னபோது ஒரு சீடனுக்கு மரம் தெரிந்தது. மற்றொருவனுக்கு பறவை முழுதாய் தெரிந்தது. ஆனால் அர்ச்சுனனுக்கு பறவையின் கண் மட்டுமே தெரிந்தது. இலக்கு நோக்கி எய்யும் போது கை மீதும் கவனம் இல்லை, வில் மீதும் இல்லை, அம்பு மீதும் இல்லை. இலக்கின் மீது மட்டுமே. அந்த இலக்கிலும் துல்லியமாக அதன் மையத்தில் மட்டுமே மனம் லயித்திருந்தது. அந்த அலைபாயும் மனதை ஒரு புள்ளியில் நிறுத்தியதாலேயே அர்ச்சுனன் ‘வில்வித்தையில் சிறந்தவர்’ என்ற பெயர் பெற்றார்.

“எண்ணம் உறுதியாக இருந்தால் எண்ணியபடி உயரலாம். நமது எண்ணம்தான் நம் எதிர்காலத்தை உருவாக்குகிறது”.

No comments:

Post a Comment